கொங்கு மண்டலம்.. திமுக லீடிங்.. ரஜினியால் அடி வாங்கப் போகிறது அதிமுக.. மூத்த பத்திரிகையாளர் இதயா
சென்னை: அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு 6% முதல் அதிகபட்சம் 9% ஆதரவு உள்ளது; ரஜினியால் அனைத்து கட்சிகளின் வாக்குகளும் சேதாரம் அடைந்தாலும் அதிமுகவுக்கு அதிக பாதிப்பு என்று மூத்த பத்திரிகையாளர் இதயா தெரிவித்துள்ளார்.
துக்ளக் பத்திரிகையில் 25 ஆண்டுகாலமாக பணியாற்றி வருபவர் இதயா. துக்ளக் இதழில் பணியாற்றிய போதும் ஒவ்வொரு தேர்தலிலும் பல்வேறு நிறுவனங்கள், பத்திரிகைகளுக்கு சுயாதீனமாக கருத்து கணிப்பு நடத்தி கொடுத்தவர்.
'துக்ளக் சத்யா' என அழைக்கப்பட்டாலும் துக்ளக் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்து கணிப்புகளையும் வெளியிட்டிருக்கிறேன் என்கிறார் இதயா. மூத்த பத்திரிகையாளர் ஜீவசகாப்தனின் Liberty Tamil யூ டியூப் சேனலுக்கு தமிழக தேர்தல் நிலவரம் தொடர்பாக இதயா அளித்த பேட்டி விவரம்:

திமுக லீடிங்- அதிமுகவுக்கு அடி
ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிப்பதற்கு முன்பாக 2 நாட்கள் நாங்கள் கொங்கு மண்டலத்தில் எடுத்த சர்வேயில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே 6% வேறுபாடு இருந்தது. அதாவது அதிமுகவை விட திமுக 6% வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தது. அதிமுகவுக்கு 40%; எனில் திமுகவுக்கு 45%-46% என்கிற நிலை இருந்தது. ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த பின்னர் மீண்டும் ஒரு கருத்து கணிப்பு நடத்தினோம். அந்த 2-வது கருத்து கணிப்பில் அதிமுகவுக்கு 36% என குறைந்தது. திமுகவுக்கு 41%-42% என மாறியது. பொதுவாக ரஜினிகாந்தால் திமுகவுக்கு 2% சேதாரம் எனில் அதிமுகவுக்கு 5% வரை சேதாரம் இருக்கிறது.

ரஜினிக்கு 9% ஆதரவு
ரஜினிகாந்த் வருகையால் பிற கட்சிகள் அதாவது நாம் தமிழர், தினகரனின் அமமுக, கமலின் மநீமவின் வாக்குகளில் இருந்து தலா 1% குறையலாம். மொத்தமாக கணக்கிட்டால் ரஜினிகாந்துக்கு 6%-8% அல்லது அதிகபட்சமாக 9% ஆதரவுதான் இருக்கிறது.

கிராமப்புறங்களில் சேராத ரஜினி அரசியல்
ரஜினிவந்தால் நல்லது என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை இரு கழகங்களில் ஒன்றுதான் தேர்வாக உள்ளது. கொங்கு மண்டலத்தில் 6 தொகுதிகளில் சர்வே எடுத்தோம். 12 நாட்கள் எடுத்தோம். அதிமுக, திமுக, ரஜினி என 3 ஆப்சனில் ரஜினிகாந்த் 3-வது இடத்தில்தான் இருக்கிறார். கிராமப்புறங்களில் பல இடங்களில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துட்டாரா? கட்சி தொடங்கி இருக்கிறாரா? என்பதே கூட தெரியாத நிலையும் உள்ளது. நகர்ப்புறங்களில் ரஜினியின் அரசியல் பிரவேசம் தெரிந்திருந்தாலும் கூட அவருக்கான ஆதரவு அதிகம் இல்லை. ஒருவேளை ரஜினிகாந்த் தாமதமாக அரசியல் பிரவேசம் என்கிற முடிவை எடுத்திருக்கிறாரோ என தோன்றுகிறது.

முதல்வர் வேட்பாளர்தான் பிரச்சனை
ரஜினிகாந்தைப் பொறுத்தவரையில் அவர் இன்னமும் கட்சியே ஆரம்பிக்கவில்லை; அது ஒருபுறம். இன்னொரு பக்கம் அவர் கட்சி ஆரம்பித்து அவரும் முதல்வர் இல்லை.. இன்னொருவர்தான் முதல்வர் என கை காட்டப் போகிறார். அப்படி ஒருவருக்கு ஓட்டு போடுவதற்கு பதில் எனக்கு தெரிந்த கட்சிக்கு ஒருவருக்கு ஓட்டுப் போட்டுவிடுகிறேன் என்கிற மனநிலையும் இளைஞர்களிடம் இருக்கிறது. ரஜினிகாந்தை விரும்புகிறவர்கள், ரஜினி வரவேண்டும் என ஆசைப்படுகிறவர்கள் கூட அவரு இல்லாமல் இன்னொருவர் முதல்வர் என சொல்வதால் ரஜினி எதிர்பார்க்கும் அரசியல் பலனே கிடைக்காது என்கின்றனர்.

எஸ்சி/ எஸ்டி மனநிலை
பழங்குடியினர், அருந்ததியினர் மத்தியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் சென்றடையவே இல்லை. எங்கள் கருத்து கணிப்பில் அவர்களது பெயர்களை யாருமே சொல்லவில்லை. இன்னும் பல இடங்களில் கருத்து கணிப்புகளில் எங்களையும் சேருங்க என வாதிடுவதற்கு சீமான் கட்சியினர் இருந்தனர்; ஆனால் கமலுக்கு அப்படி கேட்டு வாதிட பெரும்பாலானவர்கள் இல்லை. இவ்வாறு இதயா கூறினார்.












Click it and Unblock the Notifications