உதயநிதி மகன் இன்பநிதிக்காக.. மதுரை மாவட்ட பெண் கலெக்டரை மேடையில் இருந்து அகற்றியதாக அண்ணாமலை ஆவேசம்
சென்னை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி. சங்கீதாவை மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி. சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம்.
முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?
துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேடையில் இருந்து ஆட்சியர் அகற்றம் உண்மையா?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிடுவதைப் போல மேடையில் இருந்து ஆட்சியர் அகற்றப்படவில்லை; ஆட்சியர் அமர்ந்திருந்த இருக்கையில் இன்பநிதியின் நண்பர் அமர வைக்கப்பட்டார்; அதற்கடுத்த இருக்கையில் ஆட்சியர் அமர்ந்திருந்த வீடியோ பதிவுகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications