ஓசி டிக்கெட்.. "டிராமா" பாட்டிக்கு ஆதரவு குரல் எழுப்பிய அண்ணாமலை.. கேஸ் போட்டது தப்பு என கொந்தளிப்பு
சென்னை: ஓசி டிக்கெட் என ஏழ்மையை ஏளனம் செய்த திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுத்த மூதாட்டி மீது வழக்குப் பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை பதில் அளிக்கையில், "ஓசி" டிக்கெட் என்று ஏழ்மையை ஏளனம் செய்த திறனற்ற திமுக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த மூதாட்டியின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதை @BJP4TamilNadu வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த @arivalayam அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்றார் அண்ணாமலை. சென்னை ஒரு பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார்.
தரமற்ற பொருட்களை சப்ளை செய்த நிறுவனத்திற்கு மீண்டும் ஆர்டர் கொடுத்துள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு!
கொரோனா நிவாரணம்
அவர் பேசுகையில் கொரோனா கால நிவாரணமாக உங்களுக்கு குடும்ப அட்டைக்கு ரூ 4 ஆயிரம் கொடுத்தாரா இல்லையா, நீங்கள் வாங்கினீர்களா இல்லையா, வாயை திறந்து சொல்லுங்கள். பஸ்ஸுல எப்படி போறீங்க? இங்கிருந்து கோயம்பேடு போக வேண்டும் என்றாலும் ஓசி பஸ்ஸில்தானே போகிறீர்கள் என பொன்முடி பேசியிருந்தார்.
ஓசில பயணம்
இலவச பஸ் பயணத்தை இத்தனை கொச்சையாக அமைச்சர் பேசியதை பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. மேலும் சில யூடியூப் சேனல்களும் பெண்களிடம் கருத்துகளை கேட்டன. அப்போது அவர்கள், இலவச பஸ் விடுங்கள்னு நாங்களா கேட்டோம், எங்கள் வரிப்பணத்தில்தானே இலவசம் தர்றீங்க.
கால் கடுக்க நிற்கிறோம்
இலவச பஸ் எத்தனை விடுறீங்க, கால் கடுக்க நிற்பதற்கு பதிலாக நாங்கள் ஷேர் ஆட்டோவில் 40 ரூபாய் கொடுத்து செல்கிறோம். இலவச பயணம்னு நீங்களே அறிவித்துவிட்டு இப்ப ஓசினு கிண்டல் செய்தால் எப்படி என பேசியிருந்தனர். இந்த பேட்டிகளையும் எதிர்க்கட்சிகள் சமூகவலைதளங்களில் உலவ விட்டார்கள்.
கோவை அரசு பேருந்து
இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி கோவை அரசு பேருந்தில் பயணித்த பாட்டி ஒருவர் தனக்கு ஓசி பயணம் வேண்டாம். இந்தா பணம் வாங்கிக் கொண்டு இலவச டிக்கெட்டை வாங்கிக் கொள் என வாக்குவாதம் செய்தது போன்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகின. இதையும் எதிர்க்கட்சிகள் தங்கள் சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு திமுக அரசை கண்டித்தன.
மூதாட்டி மீது வழக்கு பதிவு
ஆனால் திமுக அரசின் மீது அவதூறு பரப்பும் நோக்கில் அதிமுக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் திட்டமிட்டே மூதாட்டியை வைத்து நாடகம் செய்ததாக திமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் திமுக அரசு மீது அவதூறு பரப்பும் வகையில் நடத்துநரிடம் பேருந்தில் வாக்குவாதம் செய்ததாக கோவை குரும்பபாளையத்தை சேர்ந்த மூதாட்டி துளசியம்மாள், அதிமுகவை சேர்ந்த பிரித்திவிராஜ், மதிவாணன் உள்ளிட்ட 4 பேர் மீது மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.