ஸ்டாலின் ஆர்டர்.. "அப்ளாஸ்" அள்ளிய காலை உணவு திட்டம்.. இன்று தமிழ்நாடு முழுக்க அமலுக்கு வருகிறது!
சென்னை: தமிழ்நாடு முழுக்க இன்று காலை உணவு திட்டம் பள்ளிகளில் அமலுக்கு வருகிறது. மதுரையை தொடர்ந்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை உணவு திட்டம் அமலுக்கு வருகிறது.
பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்னோடி. சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே நீதிக்கட்சி மூலம் சென்னையில் மதிய உணவு திட்டம் அமல் படுத்தப்பட்டது.
பிற மாநிலங்கள் மதிய உணவு திட்டத்திலேயே இன்னும் முழுமை பெறாத நிலையில்தான் தமிழ்நாடு அரசு காலை உணவு திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறது.தமிழ்நாடு அரசு இந்தியாவிலேயே முதல்முறையாக கொண்டு வந்து இருக்கும் திட்டம்தான் அரசு பள்ளி மாணவர்களுக்கான "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்".
காலை உணவுத் திட்டம்.. நாளொன்றுக்கு ஒரு மாணவருக்கு ரூ.12.75 செலவு.. மொத்தம் எவ்வளவு?
அறிவிப்பு
கடந்த மே மாதம் 7ம் தேதி இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார். இதையடுத்து இன்று மதுரை நெல்பேட்டையில் இந்த திட்டம் துவங்கி வைக்கப்பட்டது. நேற்று மதுரைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை அங்கு உள்ள மாநகராட்சி பள்ளிகளில் துவங்கி வைத்தார். அங்கு இருந்த குழந்தைகளுக்கு முதல்வர் ஸ்டாலினும் உணவு ஊட்டிவிட்டார். அதன்பின் அங்கு இருந்த நவீன சமையல் செய்யும் எந்திரங்களையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
திட்டம் அமல்
இதையடுத்து தமிழ்நாடு முழுக்க இன்று காலை உணவு திட்டம் பள்ளிகளில் அமலுக்கு வருகிறது. மதுரையை தொடர்ந்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இன்று காலை உணவு திட்டம் அமலுக்கு வருகிறது. மொத்தம் ரூ.33.56 கோடியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. காலை 7.45 மணிக்குள் சமையல் பணிகள் முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இந்த உத்தரவில் கூறி உள்ளது. முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட உள்ளது.
எங்கெல்லாம் செயல்படுத்தப்படும்?
முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராமப் பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 37 மாவட்டங்களில் இந்த திட்டம் இன்று செயல்படுத்தப்படும். இந்த திட்டம் மூலம் நேரடியாக ஒரு லட்சத்து 14,095 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மெனு
இந்த திட்டத்தின் அடிப்படையில் பின்வரும் மெனு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.
பல்வேறு விதமான சிற்றுண்டி வகைகளில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டுள்ள நாட்களில் வழங்க வேண்டும். திங்கட்கிழமையில் உப்புமா வகை. ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார் அல்லது சேமியா உப்புமா உடன் காய்கறி சாம்பார், கோதுமை ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார். செவ்வாய்க்கிழமையில் கிச்சடி வகை. ரவா கிச்சடி சேமியா காய்கறி கிச்சடி அல்லது சோள காய்கறி கிச்சடி அல்லது கோதுமை ரவா காய்கறி கிச்சடி புதன்கிழமை பொங்கல் வகை, ரவா பொங்கல் உடன் காய்கறி சாம்பார் அல்லது வெண் பொங்கல் உடன் காய்கறி சாம்பார். வியாழக்கிழமையில் சேமியா வகை: சேமியா உப்புமா உடன் காய்கறி சாம்பார் அல்லது அரிசி உப்புமா உடன் காய்கறி சாம்பார் அல்லது ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார், கோதுமை ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார் கொடுக்க வேண்டும். வெள்ளிக்கிழமை ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் செவ்வாய்க்கிழமை உணவு வகையின்படி ரவா கேசரி சேமியா கேசரி வழங்கப்படும்.