சிஏஜி ரிப்போர்ட்.. எதிர்பார்த்ததைவிட மோசம்.. சட்டசபையில் அதிமுகவை வெளுத்து வாங்கிய பிடிஆர்
சென்னை: தமிழக அரசின் நிதிநிலை எதிர்பார்த்ததைவிட மோசமான அளவிற்கு உள்ளதாக கூறிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், வெளிப்படையாக கடந்த ஆட்சியில் சிஏஜி அறிக்கை வெளியாகி இருந்தால், நாங்கள் அன்றைக்கே கணக்கு போட்டிருப்போம். ஆனால் இதெல்லாம் வெளியே வரவில்லை என்று பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து கேட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்தார்.
Recommended Video
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று விவாதத்தின் போது, திமுகவின் தேர்தல் அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று கூறப்பட்டது. மாநில நிதி நிலைமை அப்போதே உங்களுக்கு தெரியும். கடன் எவ்வளவு இருந்தது என்ற விவரமும் தெரிந்துதான் அறிவித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். இப்போது ஏதோதோ காரணத்தை சுட்டிக் காட்டுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் பதில் அளித்து பேசுகையில், கொரோனா 2வது அலை இவ்வளவு தீவிரமாக இருக்கும், அதற்காக அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அடுத்து, 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி கடன் என்று வெளிப்படையாக உள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அதிக வட்டியுடன் தமிழக அரசு கடன் வாங்கியுள்ளது. அதுபற்றி ஆட்சிக்கு வந்த பிறகுதான் தெரிய வருகிறது.

எப்போது விலை குறையும்
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பெட்ரோலுக்கு 9 ரூபாய் 48 பைசா வரி இருந்தபோது மத்திய அரசு 6 ரூபாய் 45 பைசா எடுத்துக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டுக்கு ஒரு லிட்டருக்கு 15 பைசா வந்து கொண்டிருந்தது. இன்றைக்கு ஒரு லிட்டருக்கு ஒன்றிய அரசு ரூ.32.33 எடுக்கிறது. இதில் தமிழ்நாட்டுக்கு 2 பைசா மட்டுமே வருகிறது. மாநில உரிமையையும், சொன்ன வாக்குறுதியையும் காப்பாற்ற முதல்வர் உறுதியாக உள்ளார். சரியான நேரத்தில் உறுதியாக செயல்படுத்தி காட்டுவோம் என்றார்.

எடப்பாடி பழனிசாமி கேள்வி
அப்போது எடப்பாடி பழனிசாமி: வெள்ளை அறிக்கை பற்றி சொல்கிறார். நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்துமே தலைமை கணக்காயர் தணிக்கைக்கு உட்பட்டது. அதில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது வெள்ளை அறிக்கை வெள்ளை அறிக்கை என்று கூறுகிறீர்கள், எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்றார்.

தணிக்கை அறிக்கை
அதற்கு பதில் அளித்த அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன்: 2017-2018ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை 2020ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி, 11ம் தேதி அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. அன்றைய முதல்வர் அலுவலகத்துக்கு 8.9.2020 அன்று அவையில் மேஜையில் வைப்பதற்காக அனுப்பப்பட்டது. அது எந்த காரணமும் கூறாமல் திருப்பி நிதித்துறைக்கு அனுப்பப்பட்டது. 2வது முறையாக இந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி முதலமைச்சர் கையெழுத்துக்கு அனுப்பப்பட்டது. எந்த காரணமும் கூறாமல் திரும்பி வந்தது. மீண்டும்15ம் தேதி முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டது.

வெளிப்படை இல்லை
இந்த ஜூன் மாதம் மீண்டும் முதல்வருக்கு அனுப்பப்பட்டது. முதல்வர் உடனே கையெழுத்து போட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த மாதிரி 5 தணிக்கை குழு அறிக்கைகள் ஒன்றரை வருடமாக வெளியிடாமல் அரசாங்கத்திடம் இருக்கிறது. இப்போதுதான் எங்களுக்கு தெரிய வருகிறது. வெளிப்படைத்தன்மை இருந்திருந்தால் ஜனநாயக மரபுபடி, அவையின் மேஜையில் வைத்து மக்களுக்கு தெரியவந்திருந்தால், நாங்கள் அன்றைக்கே கணக்கு போட்டிருப்போம். ஆனால் இதெல்லாம் வெளியே வரவில்லை. இதான் சூழ்நிலை" இவ்வாறு பிடிஆர் கூறினார்.












Click it and Unblock the Notifications