“ஆழமான பாச உணர்வுடன், இஸ்லாமியர் அனைவருக்கும்..” - மிலாடி நபி வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : மீலாதுன் நபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளான மீலாதுன் நபி திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக் கரம் நீட்டுபவராகவும் கருணையின் அடையாளமாக விளங்கியவர் நபிகள் நாயகம் என தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிலாடி நபி
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மிலாடி நபி (மீலாதுன் நபி), இந்தியாவில் அக்டோபர் 8ஆம் தேதி மாலை தொடங்கி அக்டோபர் 9ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய பண்டிகையான மிலாடி நபி, இஸ்லாத்தின் கடைசி தூதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை நினைவு கூறும் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள், இரக்கத்தையும், கருணையையும் நினைவூட்டும் நாளாக கொண்டாடி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நன்னாளான மீலாதுன் நபித் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! துயர்மிகு சூழலை இளம் வயதிலேயே எதிர்கொண்டு வளர்ந்து, ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக் கரம் நீட்டுபவராகவும் கருணையின் அடையாளமாக விளங்கினார்.

மகத்தான மனிதநேயத்திற்குச் சொந்தக்காரர்
"கோபம், பொறாமை, புறம் பேசுதல்" ஆகியவற்றை அறவே துறந்து, உயரிய பண்புகளுடன் வாழ்வதற்கான சிந்தனைகளை மனித சமுதாயத்துக்குச் சொன்னவர். "ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்" என்ற மகத்தான மனிதநேயத்திற்குச் சொந்தக்காரர். அண்ணல் நபிகளாரின் சீரிய போதனைகளும், சிறந்த அறிவுரைகளும், செழுமையான வழிகாட்டுதல்களும், ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டியவை மட்டுமின்றி, அவை பொன்னேபோல் போற்றி, ஒழுகிப் பாதுகாக்கப்பட வேண்டியவை.

ஆழமான பாச உணர்வுடன்
அண்ணல் நபிகளாரின் போதனைகளிலிருந்து வழுவாமல் வாழ்ந்துவரும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கும் ஆழமான பாச உணர்வுடன், இஸ்லாமியச் சமுதாய மக்கள் அனைவருக்கும், எனது உளம் கனிந்த மீலாதுன் நபித் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications