இன்னும் 3 மாசம்.. அலறும் சென்னை.. 4 மாவட்ட அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
சென்னை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வட கிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாகவே, மாநில பேரிடர் மீட்புப் படைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பெய்யும். குறிப்பாக சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையால் ஆண்டுதோறும் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மக்கள் அலறும் சூழல் உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு அதுபோன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடாது என்பதற்காக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக்கான பேரிடர் ஆயத்த பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு துறை செயலாளர்கள், காவல்துறை தலைவர்கள், சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை மாநகராட்சி ஆணையர், ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர்களும் பருவமழையின் சவால்களையும், இதனை திறம்பட எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள பேரிடர் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், பல்வேறு துறைகளின் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், வடகிழக்குப் பருவமழையினை திறம்பட எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துரைத்தனர். சென்னை பெருநகர காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். 1. பெருநகர சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மண்டல அளவிலான பல்துறை ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு அலுவலர்களுக்குமான பேரிடர் மேலாண்மை பணிகள் வரையறுக்கப்பட வேண்டும்.
2. குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பேரிடர் ஆயத்தம் குறித்த கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
3. சென்னை வடிநில பகுதியில் நெடுஞ்சாலை, நீர்வளத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, மெட்ரோ ரயில் ஆகிய துறைகளின் மூலம் நடைபெற்று வரும் பணிகளின் தரம் முன்னேற்றம் குறித்து, மாவட்ட மற்றும் மண்டல கண்காணிப்பாளர்களை கொண்டு கள ஆய்வு செய்ய வேண்டும் இந்த பகுதிகளில் நடைப்பெற்று வரும் பேரிடர் தணிப்பு பணிகள் அனைத்தும் 15.10.2024க்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
4. வருவாய்த்துறை, காவல்துறை, மீன்வளத்துறையின் அனைத்து முதல் நிலை மீட்பாளர்களின் பட்டியல் சரிபார்க்கப்பட்டு அவர்களை பேரிடர் மீட்பு மற்றும் எச்சரிக்கை பணிகளுக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
5. பேரிடர் மீட்பு உபகரணங்கள், வாகனங்கள், நீர் இறைப்பான்கள், படகுகள் பருவ மழை தொடங்கும் முன்னரே பாதிப்புகளுக்கு உள்ளாகும் தாழ்வான பகுதிகளில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.
6. பருவ மழை தொடங்கும் முன்னரே மாநிலத்தின் அதிக பாதிப்புகளுக்குள்ளாகும் பகுதிகளில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7. அனைத்து வானிலை வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்களின் முன்னெச்சரிக்கைகளின் அடிப்படையில், பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையிலான, பகுதிவாரியான வானிலை தகவல்கள் வழங்க நடடிவக்கை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications