ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த இளைஞர்கள்..முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..தலா ரூ.3 லட்சம் நிவாரணம்!
சென்னை: மதுரை பாலமேடு மற்றும் திருச்சி அருகே உள்ள சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது, எதிர்பாராதவிதமாக உயிரிழந்த இரு இளைஞர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
உலகப்புகழ் பாலமேடு ஜல்லிகட்டு நேற்று காலை 7.45 மணிக்கு, அங்குள்ள மஞ்சமலை சுவாமி ஆற்றுத்திடலில் நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 25 மாடுபிடி வீரர்கள் வீதம் அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு சுற்றும் 45 நிமிடம் நடந்தது. பரபரப்பாக இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்று கொண்டிருந்தது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் அடக்கினர்.

அரவிந்த்ராஜ் வயிற்றில் குத்தியது
பாலமேட்டைச் சேர்ந்த அரவிந்த்ராஜ் (வயது 26) என்பவர் அபாரமாக செயல்பட்டு காளைகளை அடக்கினார். இவர் 3 சுற்றுகள் வரை 9 மாடுகளை பிடித்து 3-ம் இடத்தில் இருந்து வந்தார். வாடிவாசலை விட்டு ஆவேசமாக வெளியேறி வந்த மாடு ஒன்று வாசலின் வலது பக்கமாக நின்று கொண்டிருந்த அரவிந்த்ராஜ் வயிற்றில் கொம்பால் குத்தி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்து அரவிந்த் ராஜ் உயிருக்கு போராடினார்.

தீவிர சிகிச்சை அளித்தும்...
உடனே அவரை மருத்துவக்குழுவினர் மீட்டு, பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதல் உதவி அளித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்துவிட்டார். இது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மாடு முட்டியதில் பலி
இதேபோல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 59 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த புதுக்கோட்டை மாவட்டம், களமாவூரை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் அரவிந்த் (வயது 25) என்பவர் மாடு முட்டியதில் காயம் அடைந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
இந்த நிலையில், பாலமேடு மற்றும் சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது, எதிர்பாராதவிதமாக உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மிகவும் வேதனை உற்றேன்
மதுரை மாவட்டம், பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டம், பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் அரவிந்தராஜ் (24) என்பவரும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், நவல்பட்டு பகுதி சூரியூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த புதுக்கோட்டை மாவட்டம், களமாவூர் கிராமம், கண்ணகோன்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் அரவிந்த் (25) என்பவரும் எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை கேட்டு மிகவும் வேதனை உற்றேன்.

தலா ரூபாய் 3 லட்சம்
இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications