'மாநிலங்களை கொத்தடிமைபோல் கையேந்த வைக்கிறது'..மத்திய அரசு மீது ஸ்டாலின் சுளீர் அட்டாக்.. பரபர பேச்சு
சென்னை: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை கொண்டு வந்து மக்களின் மனதில் அழுத்தமாக பதிந்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சியாக இருந்தபோது மத்திய பாஜக அரசை சரமாரியாக தாக்கியது திமுக. ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு அந்த அளவுக்கு நேரடியாக ஏதும் தாக்கி பேசவில்லை. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை நேரடியாக விமர்சிக்கவில்லை.

சீமான் குற்றச்சாட்டு
திமுக அரசு பாஜகவுடன் இணக்கமாக போகிறது என்று நாம் தமிழர் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இந்த நிலையில் மத்திய அரசை மிக கடுமையான விமர்சனம் செய்துள்ளார் மு.க.ஸ்டாலின். சென்னை மாதவரத்தில் நேற்று நடந்த அரசு ஊழியர் சங்கத்தின் 14-வது மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

கையேந்த வைக்கிறது
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு மாநிலங்களை கொத்தடிமையாக நடத்துவதாக குற்றம்சாட்டினார். ''கொத்தடிமை போன்ற நிலை அகலட்டும்' என்று அன்பரசு எழுதி இருக்கிறார்கள். நிதி நிலைமையைப் பொறுத்தவரை ஒன்றிய அரசிடம் கொத்தடிமை முறையைப் போலக் கையேந்தும் நிலைமையில்தான் மாநிலங்கள் இருக்கின்றன. ஜி.எஸ்.டி., முதல் வெள்ள நிவாரண நிதி வரைக்கும் நமக்குத் தரவேண்டிய நிதிகளே முழுமையாகத் தரப்படுவது இல்லை. தரப்படும் நிதியும் உரிய நேரத்தில் வழங்கப்படுவது இல்லை. கொத்தடிமைகளைப் போல் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில் தான் மாநில அரசுகள் உள்ளன" என்று கடுமையாக விமர்சித்தார் ஸ்டாலின்.

ஒன்றிய அரசு பறித்து விட்டது
அரசுக்கு வர வேண்டியதில் மிக முக்கியமானது சரக்கு மற்றும் சேவை வரி. அதனை மொத்தமாக ஒன்றிய அரசு பறித்து விட்டது. அவர்கள் மொத்தமாக எடுத்து சென்று விட்டார்கள் என்று முதல்வர் கூறினார். அரசின் கஜானாவை நாம் அனைவரும் சேர்ந்து நிரப்பி ஆக வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம் என்று அரசு ஊழியர்கள் மத்தியில் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிமுக அரசு
இதேபோல் கடந்த அதிமுக அரசையும் கடுமையாக தாக்கிய முதல்வர் கடந்த பத்தாண்டுக்காலமாகத் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தைச் சீரழித்தும் - சூறையாடியதுமான ஒரு ஆட்சி நடந்தது. இந்தக் கடந்த காலத் தவறுகளில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்கும் பணியை தொடங்கி இருக்கிறோம். தமிழ்நாட்டின் நிதி நிலைமை விரைவில் சீராகும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் பேசினார்.












Click it and Unblock the Notifications