அடடே.. அடிமட்டத்திலிருந்து எழுச்சி! இமாச்சல் முதலமைச்சராக பதவியேற்ற சுக்விந்தர் - வாழ்த்திய ஸ்டாலின்
சென்னை: இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சராக பதவியேற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுக்விந்தர் சிங்கிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகியவை போட்டியிட்டன. 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளில் யாரும் எதிர்பார்க்காத வகையில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்து உள்ளது.
இமாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்ற சுக்விந்தர் சிங் சுகு.. துணை முதல்வரான முகேஷ் அக்னி ஹோத்ரி!
40 இடங்களில் வென்ற காங்கிரஸ்
அக்கட்சி 68 இடங்களில் 40 இடங்களில் வெற்றிபெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. பாஜக 25 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று ஆட்சியை பறிகொடுத்து உள்ளது. சுயேட்சைகள் 3 பேர் இதில் வெற்றிபெற்றனர். பெரும் எதிர்பார்ப்போடு தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
யார் முதலமைச்சர்?
பாஜகவையே உலுக்கிய இந்த தேர்தல் முடிவை அடுத்து இமாச்சல பிரதேச முதலமைச்சராக யாரை காங்கிரஸ் தேர்வு செய்யும் என்ற கேள்வி எழுந்தது. குறிப்பாக இமாச்சல் முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் மனைவியும், மாநில காங்கிரஸ் தலைவருமான பிரதீபா சிங்கும் இமாச்சல பிரதேச முதலமைச்சர் பதவிக்கு குறிவைத்ததார்.
பதவியேற்ற சுக்விந்தர் சிங்
அதே நேரம் முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுக்விந்தர் சிங் சுகுவின் பெயரும் பலரால் கூறப்பட்டது. இந்த நிலையில், சுக்விந்தர் சிங்கை இமாச்சல பிரதேச முதலமைச்சராக அறிவித்து உள்ளது காங்கிரஸ் தலைமை. துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிஹோத்ரி அறிவிக்கப்படார். இந்த நிலையில் இன்று சுக்விந்தர் சிங் இமாச்சல பிரதேசத்தின் 15 வது முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
பதவியேற்பு விழா
அவருக்கு இமாச்சல் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் வாழ்த்து செய்தியில், "இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சராக பதவியேற்ற திரு.சுக்விந்தர் சிங் சுகுவிற்கு எனது வாழ்த்துக்கள். சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்து முதலமைச்சராக நீங்கள் வளர்ச்சியடைந்தது உண்மையாகவே ஊக்கம் அளிக்கிறது. உங்கள் பதவிகாலம் மக்களுக்கு சேவையாற்றி வெற்றிகரமாக தொடர வாழ்த்துகிறேன்." என்று பதிவிட்டு உள்ளார்.
யார் இந்த சுகு?
இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டம் நதான் தொகுதியில் 4 முறை சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் சுக்விந்தர் சிங் சுகு. சிம்லாவில் உள்ள இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் படித்த இவர் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். காங்கிரஸ் இளைஞரணி மாநில தலைவராகவும், காங்கிரஸ் மாநில தலைவராகவும் பதவி வகித்து இருக்கிறார்.