இந்திய வரலாற்றை புரட்டிப்போட்ட சமூக நீதி காவலர் வி.பி.சிங் புகழ் ஓங்குக: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
சென்னை: இட ஒதுக்கீடு என்ற சொல் எப்போதெல்லாம் பேசப்படுகிறதோ, அப்போதெல்லாம் தவறாமல் இடம்பெறக் கூடிய பெயர் விபி சிங். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், சமூக நீதிக் காவலருமான வி.பி.சிங்கின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விபி சிங்கிற்கு புகழாரம் சூட்டி, அவரை நினைவுகூர்ந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் மிக வசதியான குடும்பத்தில் பிறந்தவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்னும் வி.பி.சிங். செல்வச் செழிப்ப்பான குடும்பத்தில் வளர்ந்தாலும் சட்டக் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார் விபி சிங். பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களையே தானமாக வழங்கினார்.

பின்னாளில் உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் உயர் பொறுப்புகளை வகித்தார். பின்னர் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ஆனார். அவர் பிரதமராக இருந்தது வெறும் 11 மாதங்கள்தான் என்றாலும், அதற்குள் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக பி.பி மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற பரிந்துரையை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமல்படுத்தினார் விபி சிங். இதற்காக தனது ஆட்சியையே இழந்தார். எனவே சமூக நீதி காவலர் எனப் போற்றப்படுகிறார்.
சமூக நீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் சிலை நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விபி சிங்கின் நினைவு நாளான இன்று, அவரது சாதனையைப் போற்றியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
"இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர் - சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் புகழ் ஓங்குக! உயர்கல்வியிலும் - வேலைவாய்ப்புகளிலும் - தலைமைப் பொறுப்புகளிலும் நமது திறமையால் சாதனை படைத்து அவருக்கு நன்றி செலுத்துவோம்! சாதிக்கப் பிறந்தவர்களுக்குச் சாதி தடையில்லை என்பதை நிறுவுவோம்!" என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய ஒன்றியத்தின் கோடான கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய சமூகநீதிக் காவலர் - முன்னாள் பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களின் நினைவு நாள் இன்று.
அரச குடும்பத்தில் பிறந்து இருந்தாலும், அடித்தட்டு மக்களுக்காக சிந்தித்தவர். சமூகநீதியை விட பிரதமர் பதவியே பெரிதல்ல என்று துணிந்து, மண்டல் அறிக்கைக்கு உயிர் கொடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நண்பர். வி.பி.சிங் அவர்களின் புகழ் என்றும் நம் நெஞ்சங்களில் வாழும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications