தீபாவளி சிறப்பு பேருந்துகள்.. தமிழக அரசு ஈட்டிய வருமானம் என்ன? எவ்வளவு மக்கள் பயணம்?
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் குறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள வெளி மாவட்ட மக்கள் பலரும் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனர். சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய 3 நாட்கள் தீபாவளி விடுமுறையாக இருந்ததால், லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு பயணித்தனர்.
இதற்காக தமிழக அரசு தொடர்ந்து 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கியது. அதேபோல் ஆம்னி பேருந்துகளின் கட்டண அதிகரிப்பால், ஏராளமான மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர்.
சென்னையில் தீபாவளி சரவெடி.. நகரம் முழுவதும் மாசு..மலையாக குவிந்த குப்பைகள்..எத்தனை டன் தெரியுமா?
சிறப்பு பேருந்துகள்
தீபாவளி விடுமுறையாக 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10,518 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,370 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,888 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, கேகே நகர், மாதவரம் என 5 பேருந்துகள் இயக்கப்பட்டது.
லட்சக்கணக்கானோர் பயணம்
அதேபோல் பயணிகள் எளிதாக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்காக சிறப்பு மையங்களும் அமைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் வெளியூர் சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்காக மீண்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். வழக்கத்தை விட பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.
வருவாய் எவ்வளவு?
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் குறித்த தகவலை தமிழக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் கடந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தீபாவளிக்காக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.9.5 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
2.8 லட்சம் மக்கள் பயணம்
16,888 சிறப்பு பேருந்துகள் மூலம் சுமார் 2.8 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா மாநகரப் பேருந்துகளில் கடந்த செப்டம்பர் வரை 173 கோடி முறை பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.