சபாஷ்! தூய்மைப் பணியாளர்களை பெருமைப்படுத்த அரசு உத்தரவு.. நவம்பர் 1ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள்!
சென்னை : உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் வரும் நவம்பர் 1ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிராம சபை கூட்டங்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கிராம சபையில் பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்டங்கள்
கிராம சபை கூட்டங்கள் ஆண்டுதோறும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் உள்ளிட்ட நாட்களில் தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கூட்டப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு திமுக அரசு பதவி ஏற்றதும், நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட வேண்டும் என்றும், ஆண்டுக்கு 6 நாள் கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

நவம்பர் 1
இதையடுத்து நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு, வரும் நவம்பர் 1ஆம் தேதி மாநிலம் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பின் 2022 ஆம் ஆண்டு முதல் மீண்டும் நவம்பர் 1-ஆம் நாள் உள்ளாட்சிகள் கொண்டாடப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு உத்தரவு
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 1 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும். இந்த கிராம சபைக் கூட்டத்தில், அவ்வூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களைக் குறித்து முழுமையாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். கிராம சபைக் கூட்டங்களில் ஏதேனும் ஒரு ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் கூட்டப்பட்டு நலத்திட்ட உதவிகள் பல்வேறு துறை பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

திட்டங்கள் குறித்த கண்காட்சிகள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மாவட்ட அலுவலகத்தில் ஏதேனுமொரு இடத்தில் பல்வேறு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பணிகள் குறித்த கண்காட்சிகள் நடத்தலாம். மேலும் அங்கு அரசால் வெளியிடப்படும் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

பணியாளர்களை பெருமைப்படுத்த வேண்டும்
கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மேல் நிலை நீர்த் தேக்கக் தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சார்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கிராம சபையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட வேண்டும்.

கலந்துரையாடல்கள்
உள்ளாட்சிகள் தினத்தினை கொண்டாடும் விதமாக சிறப்பாக செயலாற்றிய, பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்ட, பசுமை மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்து அந்த ஊராட்சியின் வருவாயினை அதிகரித்து அதன் பலனை ஊராட்சிக்கு சரியான வகையில் பயன்படுத்திய கிராம ஊராட்சித் தலைவர்களைக் கொண்டு கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மற்றும் கருத்து பட்டறைகள் போன்றவற்றை நவம்பர் முதல் வாரத்தில் நடத்திடலாம்.

உத்தரவு
மேலும், இப்பணிகளைத் தொடர்புடைய மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பயிற்சி நிறுவனம் மண்டல பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்திட வேண்டும். மேலும் நவம்பர் 1 ஆம் நாள் 'உள்ளாட்சிகள் தினம்' குறித்த நிகழ்வுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தினை இவ்வியக்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications