முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கான போலீஸ் பாதுகாப்பு வாபஸ் ஏன்?.. தமிழக அரசு விளக்கம்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை என மத்திய மாநில உளவுத்துறை அறிக்கைகள் அறிக்கை அளித்ததன் அடிப்படையிலேயே போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நாளில், வீட்டின் முன் சகோதரர்கள், மைத்துனருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது ஒரு கும்பல் தன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் எனது மைத்துனர் கொல்லப்பட்டார். அதன் பின் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

சிவி சண்முகம் குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. எனது துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து தரவில்லை. தற்போது அந்த வழக்கு சாட்சி விசாரணை கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டு, அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை எனவும் அந்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

பாதுகாப்பு விலக்கியதற்கான காரணம்
பாதுகாப்பை விலக்கியதற்கான காரணத்தை கூறக் கோரியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.

சிவி சண்முகம்
அப்போது, தமிழக அரசு தரப்பில், கடந்த நவம்பர் மாதம் சி.வி.சண்முகத்துக்கான பாதுகாப்பை மறு ஆய்வு செய்தோம். அப்போது, சிவி சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிய வந்ததாகவும், மத்திய - மாநில உளவுப் பிரிவினரும், அவருக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என தெரிவித்ததாகவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு வாரங்களுக்கு ஒத்தி வைப்பு
மேலும், சிவி சண்முகத்தின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டதற்கான காரணத்தை இரு வாரங்களில் அவருக்கு வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications