மேகதாது அணை.. நமக்கு எதிரான சூழ்ச்சி.. தமிழ்நாடு அரசை எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்..!
சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தில் அங்கம் வகிக்கும் கேரளா, புதுச்சேரி ஆகியவற்றின் ஆதரவைத் திரட்டி மேகதாது அணை குறித்த விவாதத்தை தடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு, மேகதாது அணையை கட்டும் திட்டம் தொடர்பாக விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என தமிழக அரசு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு பல்வேறு வழிகளில் தெரிவித்த எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி விவாதிக்கும் முடிவில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உறுதியாக இருப்பது கவலையளிக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிரான சூழ்ச்சியாகவே இந்த நடவடிக்கை தோன்றுகிறது.
கர்நாடக மாநில அரசியலில் காவிரி விவகாரம் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது.. கர்நாடகத்தில் அடுத்த 6 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவிருப்பது, மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தொடர்ந்து முழங்கி வருவது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது அடுத்து என்ன நடக்கும்? என்பதை யூகிக்க முடியும்.
மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்தால், அதனடிப்படையில் புதிய அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் பலமுறை கூறியிருக்கிறார்.
அதையும், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் காவிரி ஆணையம் காட்டும் ஆர்வத்தையும் வைத்துப் பார்க்கும் போது, இந்த விவகாரத்தில் அடுத்து நடக்கவிருப்பதை எளிதில் கணிக்க முடியும். இதை உணர்ந்து இந்த விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.
ஆணையத்தில் அங்கம் வகிக்கும் பிற காவிரி பாசன மாநிலங்களான கேரளம், புதுச்சேரி ஆகியவற்றின் ஆதரவைத் திரட்டி கூட்டத்தில் மேகதாது அணை குறித்த விவாதத்தை தடுக்க வேண்டும். இந்த முயற்சிகள் அனைத்தையும் கடந்து மேகதாது அணைக்கு காவிரி ஆணையக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த தெளிவான திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.