போதும்.. பாஜக அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைங்க.. தமிழக அரசுக்கு பாலகிருஷ்ணன் கோரிக்கை
சென்னை: பாஜகவின் அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
அண்மைக் காலமாக தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை பாஜக முன்வைத்து வருகிறது. இதனிடையே கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசியது, பாஜக மாவட்டச் செயலாளர் பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது, பாஜக துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியது என பல்வேறு விவகாரங்களில் பாஜக நிர்வாகிகள் சிக்கினர். .
பாஜகவின் 8 ஆண்டு ஆட்சி என்பது சாதனையல்ல.. தமிழகத்துக்கான வேதனை.. கே பாலகிருஷ்ணன் சுளீர்
பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
இதன்மூலம் தமிழ்நாட்டில் பாஜக தீவிரமாக களமாட தொடங்கியுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசிய விவகாரத்தில், பாஜக - சிபிஎம் கட்சிக்கு இடையே விவாதம் எழுந்தது. இந்த நிலையில் பாஜகவின் அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சிபிஎம் அறிக்கை
இதுதொடர்பாக சிபிஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில நாட்களுக்கு முன் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை, அரசியலாக்கிட பாஜகவினர் முயற்சித்தார்கள். அது சாத்தியமாகாத அதிருப்தியில், நிதியமைச்சரின் கார் மீது செருப்பு வீசி வன்முறையைத் தூண்டும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டார்கள்.
பாஜகவுக்கு கண்டனம்
இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது. குற்றம் இழைத்தோர் அனைவருமே பாஜகவினர் என்பதும், திட்டமிட்டே வன்முறையில் ஈடுபட்டுள்ளதும் வீடியோக்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. ஆனாலும், பாஜக தலைமை திசைதிருப்பிக் கொண்டுள்ளது. அதேபோல் பல்கலைக்கழகத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து பாஜக தலைவர் மாட்டிக் கொண்டது, திருப்பூர் பாஜக பிரமுகரின் தற்கொலை, தர்மபுரி பாரத மாதா ஆலயத்தின் கதவு உடைப்பு உள்ளிட்ட சம்பவங்களைக் குறிப்பிட்டு பாஜகவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு
தொடர்ந்து, இத்தகைய பாஜகவின் அடாவடி அரசியலை மக்களும், ஜனநாயக சக்திகளும் வலுவாக கண்டிக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு, இவர்களின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட அரசு உறுதியான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.