பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்க முடியாது- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: ஆளுநருக்கு பதில் பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பத்திரிகையாளர்களுடன் நேற்று கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான தகவல்கள்:

தமிழகம் முற்போக்கான மாநிலமாக திகழ்கிறது; மனிதவள மேம்பாடு, உட்கட்டமைப்பில் முன்னிலை வகிக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகச் சிறந்த மனிதர். தமிழகத்தில் திமுக அரசுடன் நல்லுறவு நீடிக்கிறது. கல்வித்துறை தொடர்பான தமிழக அரசின் மசோதாக்கள் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
ஆளுநருக்கு பதில் பல்கலைக் கழக வேந்தராக முதல்வரை நியமிப்பதற்கு யுஜிசி விதிகளில் இடம் இல்லை. கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. ஆகையால் அரசியல் சாசன ஆலோசனைகளைப் பெற வேண்டி உள்ளது. பல்கலைக் கழகங்களில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்கு நான் முக்கியத்துவம் தருகிறேன்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஒரு ஆபத்தான இயக்கமாகு. என்னுடைய அனுபவத்தில் பல்வேறு இயக்கங்கள், அதன் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்துள்ளேன். பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஆபத்தான இயக்கம்தான் என ஏற்கனவே சுட்டிக்காட்டி இருக்கிறேன். இவ்வாறு ஆளுநர் ரவி கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை ஆளுநருக்கு பதில், மாநில அரசே நியமிக்கும் மசோதா கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது திமுக அரசு. ஆளுநரிடம் இருக்கும் உரிமையை பறிப்பதே சட்டத்தின் நோக்கம். ஆளுநரின் உரிமையை பறிக்கும் ஒரு மசோதாவுக்கு ஆளுநர் எப்படி ஒப்புதல் அளிப்பார் என்ற சர்ச்சை அப்போதே எழுந்தது. அதற்கேற்ப, ஆளுநரும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்தார். கிடப்பில் கிடக்கும் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க அரசு தரப்பில் இருந்து நினைவூட்டப்பட்டது. ஆனாலும், இதில் அசைந்து கொடுக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, 'இந்த மசோதாவுக்கு ஒப்புதலளிப்பதில் சட்டச் சிக்கல் இருக்கிறது என்று அரசுக்கு தற்போது பதில் தந்துள்ளார்.












Click it and Unblock the Notifications