4 பாயிண்ட்.. ஆளுநர் ரவி மீறிட்டார்.. “நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்”.. சுப.வீ எச்சரிக்கை!
சென்னை : அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவே செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் நாடு முழுவதும் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சுப.வீரபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. ஆளுநரை திரும்பப் பெறக்கோரி குடியரசுத் தலைவரிடம் திமுக கூட்டணி எம்.பிக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது,
இந்நிலையில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் ஆளுநரை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நேருக்கு நேர் வரப்போகிறார்கள்.. என்ன நடக்குமோ? கிளம்பி வரும் ஆளுநர் ரவி.. ஸ்டாலின் ரியாக்சன் என்ன?

ஆளுநருக்கு எதிராக போர்க்கொடி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி, திமுக கூட்டணி எம்.பிக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ரவி பிரிவினையை தூண்டும் வகையில் பேசுகிறார். இது அரசாங்கத்துக்கு தர்மசங்கடத்தை உருவாக்குகிறது. தமிழக அரசு, தேசத்தின் மதச்சார்பற்ற கொள்கையில் ஈடுபாடு கொண்டுள்ளது. ஆனால் ஆளுநர் அபாயகரமான, பிரிவினைவாத, மதவாத பிரச்சாரங்களை பொதுவெளியில் முன்னெடுக்கிறார். அவரது பேச்சுக்கள் திட்டமிட்டு வெறுப்பை உள்ளடக்கியுள்ளன என திமுக கூட்டணி கட்சிகள் தங்களது மனுவில் தெரிவித்துள்ளன.

சுப.வீ ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், அரசியல் சாசன சட்டட்த்தை மீறிச் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

எழுதிக் கொடுக்கும் உரையை பேச வேண்டியவர்
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுப.வீரபாண்டியன், "ஆளுநரை திரும்பப் பெற வேண்டிய கோரிக்கை எழுந்திருப்பதே ஆளுநருக்கு அழகு அல்ல, விவாதத்திற்கு அப்பாற்பட்டவராக ஆளுநர் இருக்க வேண்டும். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியில் இருந்து விலகிவிட்டு தனது சொந்த கருத்தை அவர் பேசலாம். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் எழுதிக் கொடுக்கும் உரையைத் தான் ஆளுநர் படிப்பார். அதற்கு ஆளுநர் உரை என்று பெயர், ஆனால் ஆளுநரின் உரையை ஒரு வரியை கூட அதில் சேர்க்க முடியாது, ஆட்சியில் இருப்பவர்கள் எழுதிக் கொடுக்கும் உரையை மட்டும்தான் படிப்பது ஆளுநரின் வேலை.

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
அரசுக்கு எதிராகப் பேச எந்த ஆளுநருக்கும் உரிமையில்லை. நீதிபதியாக இருந்தாலும் ஆளுநராக இருந்தாலும் குடியரசுத் தலைவராகவே இருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் உண்மையானவர்களாக அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்காக விளங்க வேண்டும். எனவே அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவே செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் நாடு முழுவதும் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சுப.வீரபாண்டியன் எச்சரிக்கை விடுத்தார்.

4 பாயிண்ட்
மேலும் பேசிய சுப.வீரபாண்டியன், "நான்கு விஷயங்களின் அடிப்படையில் ஆளுநர் தனக்கான சட்ட உரிமையை மீறி இருக்கிறார்.
1) தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுகிற சட்டமுன் வடிவுகளை உடனுக்குடன் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய ஆளுநர் அனுப்பாமல் காலம் தாழ்த்துகிறார்.
2) வேந்தர் என்கிற முறையில் பல்கலைக்கழகங்களை தான் கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்.
3) தனது சித்தாந்தங்களை வெளியிடுவதற்கு ஆளுநர் பொறுப்பை அவர் பயன்படுத்திக் கொள்கிறார்.
4) சனாதான கூட்டங்களுக்கு இடம் கொடுக்கிற இடமாக ஆளுநர் மாளிகையை அவர் மாற்றி உள்ளார்." எனத் தெரிவித்தார்.