பொழுது போகாததால் இப்படி பேசுறார்..நமக்கு கோடி வேலை இருக்கு..ஆளுநரின் தமிழகம் பேச்சால் சீமான் ஆவேசம்
சென்னை: ஆளுநர் அவர் வாங்கும் சம்பளத்திற்காக எதையாவது பேச வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு பொழுது போகவில்லை. இந்த காதில் வாங்கி இந்த காதில் விட்டுட்டு போய்விட வேண்டும் என சீமான் ஆவேசமாக பதிலளித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று பேசியது சர்ச்சையான நிலையில் சீமான் இவ்வாறு கூறியிருக்கிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 'விடுதலைப் போராட்டத்தின் தொடக்கத்தில் பல்வேறு பிரிவினைகள் நம்மிடையே இருந்தன. இப்போது நமது நாடு ஒரே பாரதம். இதில் அனைவரும் அங்கம்' என்று பேசினார்.
மேலும் அவர் கூறுகையில், " தமிழகத்தில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. ஆனால் சிலர் அமெரிக்காவை போல பல தேசங்கள் இணைந்த நாடாக கருதுகின்றனர். அது தவறு. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகின்றனர். தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்" என்று பேசினார்.

சென்னையில் சீமான் பேட்டி
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழகத்தில் ஆளும் திமுக கடும் எதிர்வினையாற்றி இருந்தது. திமுக பொருளாளர் டி.ஆர் பாலு ஆளுநரின் கருத்தை கடுமையாக சாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் தமிழ்நாட்டுக்குள் நுழைந்து நாள்தோறும் சர்ச்சையை உருவாக்கி வருவதாக விமர்சிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஆளுநருக்கு வேறு வேலையில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். இதுகுறித்து அவர் பேசியதாவது:-

தமிழருக்கே என்ற முழக்கத்தை
இந்த பேச்சு எல்லாம் ஆளுநருக்கு சரியாக இருக்கும்.. சுப்ரமணியன் சுவாமிக்கு சரியாக இருக்கும். அண்ணா தமிழ்நாடு என்று பெயர் வைக்கும் முன்பே திருநெல்வேலியில் கல்வெட்டு உள்ளது. பக்தவச்சலம் அய்யா இருக்கும் போது தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் என்றுதான் உள்ளது. இரட்டைமலை சீனிவாசன் 1926-லேயே தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முன்வைத்து இருக்கிறார்.

இருந்தா இரு இல்லைன்னா ஓடு
உங்களுக்கு தமிழகம் என இருக்கிறது.. அவர்கள் சொல்லிக்க வேண்டியதுதான். எங்க நாடு தமிழ்நாடு இஷ்டம் இருந்தா இரு இல்லைன்னா ஓடு அவ்ளோதான். தேவையில்லாமல் பேசிக்கொண்டு இருக்கக்கூடாது. எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது தனது கடிதத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சர் என போட்டு வந்தார். ஆனால், நமது தற்போதைய முதல்வர் இப்போதும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதும் தமிழகம் என்றே போடுகிறார். இரண்டுமே தவறுதான்.

நியாயமான பொருள் வரவேண்டும்
தமிழ்நாடு முதல் அமைச்சர் என்றால் சகாயம் ஐ.ஏ.எஸ், இறையன்பு ஐ.ஏ.எஸ், சைலேந்திரபாபு ஐபிஎஸ் என்பது போன்றது. தமிழ்நாடு முதலமைச்சராக மாறிவிட்டதா? இதற்கு நியாயமான பொருள் வரவேண்டும் என்றால் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் என்றே இருக்க வேண்டும். தமிழ்நாடு முதல் அமைச்சர் என்றால் தமிழ்நாடே முதல் அமைச்சர் ஆகிவிட்டது போல பொருளாகிறது.

அவருக்கு ஒரு வேலையும் இல்லை
எனவே இதை மாற்றி இனி தமிழ்நாட்டு முதல் அமைச்சர் என்று சொல்ல வேண்டும். ஆளுநர் அவர் வாங்கும் சம்பளத்திற்காக எதையாவது பேச வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு பொழுது போகவில்லை. இந்த காதில் வாங்கி இந்த காதில் விட்டுட்டு போய்விட வேண்டும். நமக்கு கோடி வேலை இருக்கு. அவருக்கு ஒரு வேலையும் இல்லை. எதையாவது பேசிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.












Click it and Unblock the Notifications