சூரப்பா ஊழல் புகார்.. கலையரசன் ஆணையத்திற்கு 10 நாட்கள் கூடுதல் அவகாசம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணைக் குழுவுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகக் கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார்.
இருப்பினும், பணியில் இருக்கும்போது இவருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் சுமுகமான உறவு இருந்ததில்லை. தொடர்ந்து தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கையே கொண்டிருந்தார்.
தமிழ்நாடு அரசு vs சூரப்பா
அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி மத்திய அரசு விண்ணப்பித்தார். மேலும், அரியர் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு எதிராகச் செயல்பட்டார். இந்த மோதல் போக்குகளுக்கு இடையே, இவர் துணை வேந்தராக இருந்த போது அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 250 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
விசாரணைக் குழு
இதையடுத்து சூரப்பா மீதான புகாரை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. கலையரசன் விசாரணைக் குழு நடத்திய முதல்கட்ட விசாரணையில் சூரப்பா மீதான புகார்களுக்கு முகாந்திரம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், தன்னை பதவி நீக்கம் செய்ய இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது தான் ஓய்வுபெற்று விட்டதால், விசாரணைக் குழு செல்லாது என சூரப்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சூரப்பா மறுப்பு
இருந்தாலும் நீதிபதி கலையரசன் குழு சார்பில் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதது. மேலும் சூரப்பா ஓய்வு பெற்றாலும்கூட விசாரணை முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக சூரப்பாவிடமும் விளக்கம் கேட்டு விசாரணைக் குழு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசுக்கு பதிலளித்த சூரப்பா தான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என கூறியிருந்தார்.
10 நாட்கள் நீட்டிப்பு
இதையடுத்து கலையரசன் விசாரணைக்குக் குழு விரிவான அறிக்கை தயார் செய்யும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் தேவை என விசாரணைக்குக் குழு தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கூடுதலாக 10 நாட்கள் கால அவகாசம் அளித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.