ரேஷன் கார்டு இல்லாத திருநங்கைகளுக்கும் நிவாரண நிதி வழங்குவது குறித்து பரிசீலனை - தமிழக அரசு தகவல்!
சென்னை: ரேஷன் கார்டு இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் ரூ.4,000 கொரோனா நிவாரண உதவியை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் கிரேஸ் பானு கூறி இருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், '' ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் நிவாரண உதவியை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார்.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் இதுகுறித்து எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications