அதிரடி மாற்றங்கள்... அண்ணா பல்கலைக்கழகம் 2-ஆக பிரிப்பு... சட்டசபையில் சட்ட முன்வடிவு தாக்கல்..!
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக 2-ஆக பிரிக்கும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இந்த முக்கிய மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார்.
இதேபோல் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்ட முன்வடிவு மசோதா உள்ளிட்ட 18 சட்ட முன்வடிவுகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2-ஆக பிரிப்பு... விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம்..!
நிறைவு நாள்
கொரோனா பரபரப்பு மத்தியில் நேற்று முன் தினம் தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. மூன்றாவது நாளான இன்று துணை நிதி நிலை அறிக்கை தாக்கல், சட்ட முன்வடிவு தாக்கல், கேள்வி-பதில், நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்தவகையில் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிப்பு, ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை உள்ளிட்ட 18 சட்டமுன்வடிவு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நிர்வாக வசதிக்காக
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் சட்டமசோதாவை தாக்கல் செய்துள்ளார் அமைச்சர் கே.பி.அன்பழகன். மாநிலம் முழுவதும் உள்ள இணைப்புக் கல்லூரிகளை நிர்வாகம் செய்ய வசதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சட்ட மசோதாக்கள்
மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிகள் திருத்தச் சட்டம் மற்றும் நகராட்சி, மாநகராட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு, வேதா நிலையத்தை நினைவிடம் ஆக்குவதற்கான சட்ட மசோதா, திருமண பதிவு செய்தல் சட்டத்திருத்த மசோதா, என 18 சட்ட முன்வடிவுகள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஓ.பி.எஸ். தாக்கல்
இதனிடையே துணை நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம். கடந்த 6 மாதங்களாக பேரவையின் ஒப்புதல் பெறாமல் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் பற்றி குறிப்பிட்டு அது அவையில் ஒப்புதல் பெறப்பட்டது.