அங்கீகாரம் இல்லாத மனை பதிவு.. களம் இறங்கும் தனி டீம்... சிக்கலில் 168 சார்பதிவாளர்கள்?
சென்னை : அங்கீகாரம் இல்லாத மனையை பதிவு செய்தததாக கூறப்படும் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி 168 சார்பதிவாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பத்திரப்பதிவு துறை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நடந்த அங்கீகாரமற்ற பத்திரப்பதிவுகள் குறித்து தனி டீம் விசாரணை நடத்த உள்ளதால் அதிகாரிகள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது,. இதனால் ஏற்கனவே பத்திரப்பதிவு செய்த மனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக, ஆலோசித்த தமிழக அரசு, கடந்த 2016 அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை வரன்முறை செய்யும் திட்டத்தை கடந்த 2017ல் மே 4ம் தேதி அறிவித்தது.
ஆனால், வரன்முறை கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறி 14 லட்சம் மனைகளில் 4 லட்சம் மனைகள் மட்டுமே வரன்முறை செய்யப்பட்டன. அதே நேரத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சில சார்பதிவாளர் அலுவலகங்களில் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது.

கடந்த ஐந்து வருடம்
இந்த நிலையில் கடந்த மே மாதம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், கடந்த சில ஆண்டுகளில் அங்கீகாரம் இல்லாத மனை பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் மாவட்ட தணிக்கை பதிவாளர்கள் மூலம் மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தது.

எங்கெல்லாம் பதிவு
இந்த ஆய்வில் தமிழகத்தில் 168 பல சார்பதிவாளர் அலுவலகங்களில் அங்கீகாரம் இல்லாத மனை பதிவு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ராஜபாளையம் , நத்தம் , ஆம்பூர், காட்பாடி, திருப்பத்தூர், திண்டிவனம் 2ம் எண் இணை சார்பதிவாளர் அலுவலகம், திருமங்கலம் அலுவலகம், குன்னூர் சார்பதிவாளர் அலுவலகம், திருப்புவனம் சார்பதிவாளர் அலுவலகம், சாயல்குடி சார்பதிவாளர் அலுவலகம், ராஜசிங்கமங்களம் அலுவலகம், வடமதுரை , ஒட்டன்சத்திரம் , மேலூர் அலுவலகம், கருங்கல்குடி அலுவலகங்களில் பெயர்கள் உள்ளன.

ஆவணங்கள் மறைப்பு
இதேபோல் திருச்சி, அரியலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, வேலூர், சேலம், கோவை, ஊட்டி, நாகை ,கன்னியாகுமரி, மார்த்தாண்டம், புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, கரூர், உள்ளிட்ட பதிவு மாவட்டங்களில் அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு செய்த அலுவலகங்களில் விவரங்கள் மறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் அங்கீகாரம் இல்லாத மனை ஏதும் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பது தொடர்பாக ஐஜி சிவன் அருள் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

சார்பதிவாளர்கள்
தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத மனையை பதிவு செய்த 168 சார்பதிவாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை முடிவு செய்துள்ளதாக அந்ததுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. .கடந்த ஆட்சி காலத்தில் பதிவுப்பணிகள் நடந்துள்ள தவறுகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் போலியாக பதிவு செய்யப்பட்ட மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட இனங்களை கண்டறிந்து அறிகை்க அளிப்பதற்காக ஒரு சிறப்பு புலனாய்வு குழு ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறியிருந்தார்.

பதிவுத்துறை தவறுகள்
அதன்பேரில் விரைவில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட உள்ளது.. அந்த குழு சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்ய உள்ளார்கள். இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பதிவுத்தவறுகள் சரி செய்யப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications