போலீஸ் விசாரணையில் உயிரிழந்த ஆட்டோ டிரைவர்.. குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
சென்னை: காவல் நிலையத்தில் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த ஆட்டோ டிரைவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மேட்டுக்குப்பம்தைச் சேர்ந்தவர் சொக்கி. இவரது மகன் கதிரவன், ஆட்டோ டிரைவர். கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி மாலை கதிரவன் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

ஆட்டோ டிரைவர்
அப்போது தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அவரை மதுரவாயல் காவல் நிலைய காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றது அதன்பின்பு தெரியவந்தது.
விசாரணை முடிந்து கதிரவனை அனுப்பி வைத்து விடுவதாக காவலர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் கதிரவன் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக அவரது தந்தை சொக்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மர்ம மரணம்
இதனை தொடர்ந்து சொக்கி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்றபோது கதிரேசன் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. காவலர்கள் சித்ரவதை செய்ததால்தான் தனது மகன் மரணம் அடைந்து விட்டதாக கூறி, மதுரவாயல் காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு, சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜெயக்குமார், ஏட்டுகள் கண்ணப்பன், ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் சொக்கி புகார் அளித்தார்.

5 லட்சம் ரூபாய் இழப்பீடு
இந்த புகாரை மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன் விசாரித்தார். கதிரவனின் உடலில் காயம் எப்படி ஏற்பட்டது என்பதை காவலர்களால் நிரூபிக்க முடியவில்லை? குடிபோதையில் இருந்தவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று சித்ரவதை செய்ததால்தான் அவர் இறந்து இருக்கிறார் என்பதால், அவரது குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

ஒழுங்கு நடவடிக்கை
மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜெயக்குமார் ஓய்வு பெற்றுவிட்டதாலும், ஏட்டு ரவீந்திரன் மரணமடைந்துவிட்டதாலும், மற்ற இருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications