ஊரக உள்ளாட்சித் தேர்தல்- முதல் கட்ட வாக்குப் பதிவு அமைதியாக நிறைவு- சுமார் 60% வாக்குகள் பதிவு!
Recommended Video
சென்னை: தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை அமைதியாக நடைபெற்றது. ஒருசில இடங்களில் மட்டும் சில சர்ச்சை சம்பவங்கள் நிகழ்ந்தன.
27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது,.
மொத்தம் 156 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 2546 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 4700 ஊராட்சி தலைவர்கள், 37,830 ஊராட்சி உறுப்பினர்கள் மொத்தம் 45,336 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது,
இத்தேர்தலில் 2,31,890 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இன்றைய தேர்தலில் மொத்தம் இன்று 1.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
சுமார் 2,00,000 ஊழியர்கள் இன்றைய தேர்தல் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 24, 680 வாக்குச்சாவடிகள் இதற்காக அமைக்கப்பட்டிருந்தன.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 63,000 போலீசார் ஈடுபடுத்தபட்டனர்.. பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
காலை முதல் மாலை வரை விறுவிறுவென வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒருசில சர்ச்சை சம்பவங்களைத் தவிர பொதுவாக வாக்குப் பதிவு அமைதியாகவே நடைபெற்றது. மொத்தம் சுமார் 60%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.
2-ம் கட்ட வாக்குப் பதிவு வரும் 30-ந் தேதி நடைபெறுகிறது. இரு கட்ட வாக்குகளும் ஜனவரி 2-ல் எண்ணப்படுகின்றன.