அதானி, அம்பானி மீது பாய்ந்த அம்பு! மோடி தாக்குதல்! அன்று Wealth creators என்றது பொய்யா?
சென்னை: அதானி, அம்பானி போன்ற நண்பர்களையே அரசியல் லாபத்திற்காக அபாண்டமாகப் பழி போடுகிறார் மோடி என்று பலரும் பேசத் தொடங்கி உள்ளார். இதுவரை மோடியின் நெருங்கிய நண்பர்களாக இருந்த இந்த இருவரும் இப்போது குற்றவாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.
பாஜக அரசு மீது பல காலமாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்துப் பேசி வந்த குற்றச்சாட்டை அப்படியே ராகுல்காந்தி மீதே திருப்பி போட்டார் பிரதமர் மோடி.

'அதானி மற்றும் அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் கட்சி கருப்புப் பணத்தைப் பெற்றுள்ளது. டெம்போவில் பணம் கட்டுக்கட்டாக அனுப்பப்பட்டுள்ளது' என்று ஒரு புதிய குண்டை தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தூக்கி வீசி இருக்கிறார் மோடி.
இதற்கு ராகுல்காந்தி, "காங்கிரசுக்கு டெம்போவில் பணம் வருவதாகப் பிரதமர் மோடி மிகத் தீவிரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். முடிந்தால் இடி, சிபிஐ அமைப்புகளை ஏவி விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுங்கள்" உடனடியாக வீடியோ பதிவிட்டு பதிலடி கொடுத்திருந்தார்.
இன்று ராகுல்காந்தி, "அதானி ஜி.. அம்பானி ஜி.. இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் சுற்றி வளைத்துவிட்டார்கள்.. என்னைக் காப்பாற்றுங்கள் எனப் பிரதமர் மோடி கூவி வருகிறார்!" என்றும் பேசி இருக்கிறார்.

இதனால் அதானியை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கையில் எடுத்த ஆயுதத்தை அப்படியே திருப்பி அவர்கள் மீதே பயன்படுத்தி இருக்கிறார் பிரதமர் மோடி.
இதுவரை பாஜக எதிர்ப்பு அரசியல் என்பதே அதானியை முன்வைத்தே இயங்கி வந்துள்ளது. ' மோடி தனது நண்பர்கள் நலனுக்காகவே ஆட்சி நடத்தி வருகிறார்' என்பதே பிரதான குற்றச்சாட்டாக இருந்து வந்தது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பாஜக அரசானது மக்கள் நலனைவிட அம்பானி அதானி ஆகிய இரண்டு பணக்காரர்களின் நலனுக்காகவே ஆட்சி நடத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டைதான் தொடர்ந்து முன்வைத்து வந்தனர்.
மோடி மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை அதானியிடம் விற்று வருகிறார் என்றும் சில தனியார் நிறுவனங்களை மிரட்டி அதானிக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் காங்கிரஸ் புகார் கூறி வந்தது.
குறிப்பாக ஜிடிகே குரூப் நிறுவனம். இந்த நிறுவனம்தான் மும்பை ஏர்போர்ட்டை நிர்வகித்து வந்தது. அந்த நிறுவனத்திற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது.

அதன்பின்னர் அந்தக் குழுமம் மும்பை ஏர்போர்ட் பராமரிப்பு ஒப்பந்தப் பணிகளிலிருந்து வெளியேறுகிறது. அதன்பின்னர் அதை அதானி பெறுகிறார். இதன் பின்னணியில் மோடி இருந்துள்ளார் என்பதே பலரது குற்றச்சாட்டு.
ஆனால், இப்போது தனது நண்பர்களான அதானி, அம்பானி மீதே தேர்தல் அரசியலுக்காகப் பழி சுமத்தியுள்ளார் மோடி.
அதுவும் கருப்புப் பணம் கைமாறி உள்ளதாகச் சொல்லி இருக்கிறார். ஒரு பிரதமரே தனக்கு நெருக்கமாக உள்ள தொழிலதிபர்களிடம் கருப்புப் பணம் உள்ளதைப் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இருப்பது அரசியல் களத்தில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகத்தான் பணமதிப்பிழப்பு என்பதே கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் கருப்புப் பணத்தை பாஜக அரசு ஒழித்துவிட்டதாகவும் முன்பே சொல்லி இருக்கிறது. ரிசர்வ் பேங்க்கூட கூடுமான வரை அனைத்து பணமும் திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளது. அப்படியான சூழலில் நாட்டின் மிகப்பெரிய 2 தொழிலதிபர்கள் டெம்போவில் கருப்புப் பணத்தைக் காங்கிரசுக்கு வழங்கி உள்ளதாகப் பிரதமரே சொல்லி இருக்கிறார்.
அப்படி என்றால், லஞ்சம் கொடுப்பது என்பது சட்டப்படி தவறு. அதைப் பெறுவதைப் போலவே கொடுப்பது குற்றம். இதற்காக இரண்டு தொழிலதிபர்கள் மீது வழக்குகள் பாயுமா? அதற்கான சட்ட நடவடிக்கைகளை மோடி அரசு எடுக்குமா? எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.

சிலர் அரசியல் லாபத்திற்காகச் சொந்த நண்பர்கள் மீதே அபாண்டமாகப் பழி போட்டுள்ளார் மோடி. அவரது செயல் அதிர்ச்சி அளிக்கிறது என்கின்றனர்.
இதுவரை பாஜக, அம்பானி அதானி தான் நாட்டின் வளர்ச்சியை உருவாக்குபவர்கள். அதாவது Wealth creators என்றே கூறி வந்தது. இப்போது அந்த Wealth creators கருப்புப் பணத்தைக் காங்கிரசுக்குத் தருகிறார்கள் என்று மோடி சொல்கிறார்.
எது உண்மை? இந்தக் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்பார்களா? இத்தனை நாள்களாக ராகுல் அதானி பற்றி மக்களவையில் கேள்வி எழுப்பிய போது எல்லாம் நண்பர்களை அரவணைத்தவர். இன்று இப்படி பகிரங்கமாகப் பொதுவெளியில் குற்றச்சாட்டை வெளியிட்டது ஏன்?
எல்லாம் தேர்தல் காலம்.. அப்படித்தான் இருக்கும் என்கிறார்கள் பொதுமக்கள்.












Click it and Unblock the Notifications