இனி ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது.. தமிழகத்தில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு முதல்வர் வைத்த செக்!
சென்னை: தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படும், ஆக்கிரமிப்பாளர்கள் இனி தப்ப முடியாது என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்..ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் அரசுக்கு சொந்தமான சுமார் 91 ஏக்கர் நிலம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வந்துள்ளது. நிலத்தை மீட்ககோரி 2013-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த 91 ஏக்கர் நிலத்தையும் தமிழக அரசு இன்று அதிரடியாக மீட்டுள்ளது. இந்த நிலத்தில் வசித்து வந்தவர்களை வெளியேற கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

91 ஏக்கர் நிலம் மீட்பு
ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்..ஆர். ராமச்சந்திரன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்..ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் உத்தரவு
செம்மஞ்சேரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த 91.04 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை நீதிமன்ற உத்தரவின்பேரில் மீட்டுள்ளோம். தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பாளர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் ஆக்கிரமிப்பு இருக்கிறது,

விரைவில் மீட்கப்படும்
ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளில் எத்தனை இருக்கின்றன? இவற்றை விரைவுபடுத்தி ஆக்கிரமிப்பு நிலங்களை எப்படி மீட்பது? என்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் தகவல் கேட்டுள்ளோம். இதனை தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலங்கள் அனைத்தும் விரைவில் மீட்கப்படும். தமிழகத்தில் மருத்துவமனைகள் கட்டுவதற்கு கூட இடமில்லை. பிரைம் ஏரியா என்று சொல்லக்கூடிய முக்கியமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

யாரும் தப்ப முடியாது
அனைத்து இடங்களையும் மீட்டு அரசுக்காக பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று 91 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து கையகப்படுத்தி இருக்கிறோம். இதேபோல் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு தொடரும். சென்னையிலும் பல்வேறு இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. நில ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் தப்ப முடியாது. இவ்வாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்..ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications