ஆவின் ஊழல்: 'ராஜேந்திர பாலாஜி பற்றி திடுக் தகவல்கள் வரும்..வெயிட் அண்ட் சீ..' அமைச்சர் நாசர் பன்ச்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாக அமைச்சர் நாசர் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று தேனி மாவட்டத்தில் உள்ள ஆவின் நிலையங்கள் மற்றும் ஆவின் பால் உற்பத்தி நிலையங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராஜேந்திர பாலாஜி ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாகத் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

10 அமைச்சர்கள்
தேனி மாவட்டத்தில் ஆய்வுகளுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், "தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார் அதன் அடிப்படையிலே தற்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றோம். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 83 கோடி ரூபாய் சிக்கியுள்ளது. அவரிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் முன்னாள் 10 அமைச்சர்கள் பெயர் உள்ளது அதில் எடப்பாடி பழனிசாமி பெயரும் உண்டு.

3 கோடி ரூபாய்
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக தங்களிடம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 30 லட்ச ரூபாய் வாங்கி பண மோசடி செய்ததாக இருவர் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையைத் தொடங்கிய போது தான், அது ரூ 30 லட்சம் இல்லை 3 கோடி ரூபாய் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

குற்றப்பத்திரிகை
இதையடுத்து அவர் மீது உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார். அவரை பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அவர் விரைவில் கைது செய்யப்படுவார்.

வெயிட் அண்ட் சீ
ஆவின் நிறுவனத்தில் நடந்த ஒட்டு மொத்த ஊழலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால்தான் அரங்கேறியுள்ளது. வெயிட் அண்ட் சீ! விரைவில் இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும்" என்று அவர் தெரிவித்தார். ராஜேந்திர பாலாஜியை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் நாசரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமறைவு
சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டதும், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும், தனது வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் அவர் தாக்கல் செய்துள்ளார். அதேநேரம் போலீசார் அவர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் தலைநகர் டெல்லியில் பதுங்கிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து உடனடியாக சிறப்புத் தனிப்படை இன்று டெல்லி விரைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications