சசிகலா அதிமுகவில் இணைகிறாரா? மழுப்பலான பதில் சொன்ன அமைச்சர் உதயகுமார்
சென்னை: அதிமுகவில் சசிகலா மீண்டும் இணைவாரா? என்பது குறித்த கேள்விக்கு எனக்கு எதுவும் தெரியாது என மழுப்பலான பதிலை தந்துள்ளார் அமைச்சர் உதயகுமார்.
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா ஜனவரியில் விடுதலையாவாரா? அல்லது முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவாரா? என்பதையே இப்போது அரசியல் களம் விவாதிக்கிறது. அதேபோல் சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

தினகரன் டெல்லி பயணம்
ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்கள், சசிகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை அதிமுகவில் சேர்க்கவே மாட்டோம் என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். ஆனால் தினகரனின் டெல்லி பயணத்துக்கு பின் அதிமுகவினரின் சுருதி குறைய தொடங்கி இருக்கிறது.

அதிமுக பொதுச்செயலர் சசிகலா
சசிகலாவே அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், முதல்வராக எடப்பாடி, துணை முதல்வராக ஓபிஎஸ் ஆகியோர் நீடிப்பார்கள்; இதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகளை பாஜக முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இது தொடர்பாக அதிமுகவினர் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க தயங்குகின்றனர்.

ஆர்பி உதயகுமார்
சென்னையில் இன்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது தொடர்பான கேள்விக்கு வழக்கத்தைவிட மழுப்பலான பதிலையே தெரிவித்தார்.

சசிகலாவா? மழுப்பல் பதில்
செய்தியாளர்களின் கேள்விக்கு உதயகுமார் பதிலளிக்கையில், அதிமுகவில் நான் ஒரு சாதாரண தொண்டன். என்னைப் பொறுத்தவரை தற்போது கொரோனா பிரச்சனை, விவசாய பிரச்சனைகள் மட்டும்தான் எரியும் என்றார். மேலும் சசிகலா அதிமுகவில் இணைவது தொடர்பாக எதுவுமே எனக்கு தெரியாது என்றார் உதயகுமார்.












Click it and Unblock the Notifications