ஆதி திராவிட மாணவர்கள் உதவித்தொகை.. முதல்வர் ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கை வைத்த ரவிக்குமார் எம்.பி
சென்னை: ஆதி திராவிட மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு வருமான வரம்பை உயர்த்தவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ரவிக்குமார் எம்.பி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பல்வேறு விதமான படிப்பு உதவித் தொகைகள் ஒன்றிய அரசின் பங்களிப்போடும், தமிழ்நாடு அரசாலும் வழங்கப்படுகின்றன.

அரசாணை
பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் கிரீமிலேயரைக் கண்டறிவதற்கான வருமான வரம்பு ஆண்டுக்கு 8 லட்சமாக உள்ளது. அதில் என்னென்ன வருமானங்களைக் கணக்கில் கொள்ளவேண்டும் என்ற வழிகாட்டுதல்களை விவரித்து தமிழ்நாடு அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முன்னேறிய பிரிவினருக்கான (EWS) இட ஒதுக்கீட்டுக்கும் 8 லட்ச ரூபாய் ஆண்டு வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எஸ் சி,எஸ்டி, ஓபிசி பிரிவினர் படிப்பு உதவித்தொகை (Scholarship ) பெறுவதற்கான வருமான வரம்பு மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டரை லட்சம் ரூபாய்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி சமூகத்து மாணவர்கள் : 1.Pre-Matric Scholarship Scheme for STD IX & STD X SC/ST students, 2.Government of India Post Matric Scholarship Scheme for SC/ST, 3. Higher Education Special Scholarship, 4.Incentive for Full time Ph.D., Scholar, 5. State Special Post-Matric Scholarship (beyond X Std.) ஆகிய உதவித் தொகைகளைப் பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு இரண்டரை லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு மாணவர்கள் மட்டுமே பயன்
அயல்நாட்டில் சென்று கல்வி பயில்வதற்கான 'ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப்' ( Overseas Scholarship ) பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு 3 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் ஆதிதிராவிட மாணவர்களுக்கான 'ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப்' திட்டத்தில் இதுவரை இரண்டு மாணவர்கள் மட்டுமே பயன் பெற்றுள்ளனர் என்று வேதனையோடு தெரிவித்தார். அதற்குக் காரணம் அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கு மேல் போகக்கூடாது என நிர்ணயிக்கப்பட்டிருப்பதுதான்.

உதவித்தொகை பெற முடியவில்லை
பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ( ஓ.பி.சி., எம்.பி.சி.) மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் மற்றும் ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக் கழகங்களில் படிப்பதற்கான உதவித்தொகை முதலானவற்றைப் பெறுவதற்கு பெற்றோரின் வருமானம் ஆண்டுக்கு 2 லட்சத்துக்கு மேல் இருக்கக்கூடாது என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த வருமான வரம்புகளால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களில் பலர் படிப்பு உதவித்தொகை பெற முடியவில்லை. அதனால் அவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பின்வரும் கோரிக்கைகளைத் தங்களது கனிவான பரிசீலனைக்கு முன்வைக்கிறேன்.

வருமான வரம்பு
ஆதிதிராவிட மாணவர்கள் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை நிர்ணயிப்பதென்பது அவர்களுக்கும் 'கிரீமி லேயர்' அளவுகோலை மறைமுகமாகப் புகுத்துவதாகவே பொருள்படும். எனவே, ஆதிதிராவிட மாணவர்கள் ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட அனைத்துவிதமான படிப்பு உதவித்தொகைகளைப் பெறுவதற்கும் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை முற்றாக நீக்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். ஓபிசி, எம்பிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தொகையையே (தற்போது ஆண்டுக்கு 8 லட்சம்) படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான வருமான வரம்பாகவும் நிர்ணயிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன், எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications