இவ்வளவு உதவி செய்தும்..தனுஷ்கோடி அருகே வேவுபார்த்தாரா இலங்கை மாஜி போலீஸ்? கிடுக்குப்பிடி விசாரணை
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே தீடை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்த இலங்கை முன்னாள் போலீஸ் பிடிபட்டுள்ளார். தனுஷ்கோடி பகுதியில் வேவு பார்க்கும் நடவடிக்கையில் அந்த இலங்கை மாஜி போலீஸ் ஈடுபட்டாரா? என்பது தொடர்பாக கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
தனுஷ்கோடி தீடை பகுதியில் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை கடலோர காவல்படையினர் பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் முன்னுக்குப் பின்னான தகவல்களை அந்த நபர் தெரிவித்ததால் தீவிரமாக விசாரிக்கப்பட்டார்.

இலங்கை போலீஸ்
இதனையடுத்து அந்த நபர் இலங்கை திருகோணமலையை சேர்ந்த தினேஷ்காந்த் என தெரியவந்தது. இலங்கையில் 2012-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை போலீசாகவும் பணியாற்றியவர். பின்னர் விருப்ப ஓய்வு பெற்றதாகவும் கூறியுள்ளார்.

விமானம் மூலம் வருகை
பொதுவாக இலங்கையில் இருந்து தஞ்சமடைய வரும் ஈழத் தமிழர்கள், கடல்வழியாக வருவது வழக்கம். ஆனால் தனுஷ்கோடியில் பிடிபட்ட தினேஷ்காந்த், விசா எடுத்துக் கொண்டு விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்திருக்கிறார்.

தனுஷ்கோடியில் சந்தேகம்
அதன் பின்னரே ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிக்கு தினேஷ் காந்த் வந்துள்ளார். ராமேஸ்வரம் அகதிகள் தடுப்பு முகாமுக்கு வரக் கூடியவராக இருந்தால் ஏன் விமானம் மூலம் சென்னை, மதுரைக்கு வர வேண்டும் என்று கடலோர காவல்படையினர் கேள்வி எழுப்பினர். ஆனால் தினேஷ்காந்திடம் இருந்து தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

உளவு வேலையா?
இதனால் தனுஷ்கோடி பகுதியில் வேவுபார்க்க அனுப்பி வைக்கப்பட்டவரா? என்கிற சந்தேகமும் எழுந்தது. இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் வாழ்வா? சாவா என அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது. சர்வதேச சமூகத்தில் இந்தியா மட்டுமே இலங்கைக்கு பெரும் உதவி செய்து வருகிறது. இப்படி இந்தியா உதவி வரும் நிலையில் இந்தியாவை வேவு பார்க்க இலங்கை அனுப்ப சாத்தியம் உள்ளதா? என்றும் ஆராயப்பட்டு வருகிறது. இந்த சந்தேக நபரிடம் மொத்தம் 5 மணிநேரம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சந்தேக நபர் தினேஷ்காந்தின் விசா முடிவடைய 90 நாட்கள் இருக்கிறது; அதனால் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடக் கூடாது என எச்சரித்து கடலோர காவல்படையினர் அவரை விடுவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications