Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோசமான முன்னுதாரணம்.. அரசு ஊழியர்கள் செய்தால் குற்றம் இல்லையா? அபராதம் வாபஸ் ஏன்? வெடித்த சர்ச்சை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக அரசுப் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம், காவல்துறையால் வாபஸ் பெறப்பட்டுள்ளது, மோசமான முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் அரசுப் பேருந்தில் பயணித்த காவலர் ஒருவர், டிக்கெட் எடுக்க மறுப்பு தெரிவித்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பெரும் விவாதமாக மாறிய நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

TN police withdrawal on actions against govt buses is a wrong example


போக்குவரத்துத் துறை போட்ட போடு: போலீசார் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும், வாரண்ட் இல்லாமல் பயணிக்கும் போலீசார் டிக்கெட் எடுப்பது கட்டாயம் என போக்குவரத்துத் துறை தெரிவித்தது. மேலும், அரசுப் பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காத அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

காவல்துறை பதிலடி: சென்னையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். அதேபோல நெல்லையில் 3 அரசு பேருந்துகளில் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியவில்லை, போக்குவரத்து விதிகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை, சீருடை சரியாக அணியவில்லை என கூறி ஒவ்வொரு பேருந்து ஓட்டுநருக்கும் தலா ரூ 500 அபராதம் விதித்தனர்.

அரசுப் பேருந்து நடத்துநர் - போலீஸ்காரர் இடையேயான பிரச்சனைக்குப் பிறகு, அரசு பேருந்துகளுக்கு தமிழக போலீசார் அபராதம் விதிக்க தொடங்கியதால் இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. காவல்துறைக்கும் போக்குவரத்துத் துறைக்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டது.

சமாதானம்: தமிழக அரசின் இரு துறைகள் இடையேயான இந்தப் பிரச்சனை தீவிரமானதை தொடர்ந்து, இரு துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கை தவிர்ப்பதற்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் உள்துறை செயலர் அமுதா மற்றும் போக்குவரத்துத் துறை செயலர் பணீந்திர ரெட்டி ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர்.

அப்போது, இரு துறையினரும் சமூகமாக பேசித் தீர்த்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, டிக்கெட் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலரும், நடத்துநரும் பரஸ்பரம் வருத்தம் தெரிவித்து ஒருவருக்கொருவர் கைகுலுக்கி, ஆரத்தழுவி ஒன்றாக டீ குடித்தபடி சமாதானம் ஆகினர். இதுதொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டது.

போக்குவரத்துறையும் காவல்துறையும் நண்பர்களாகச் செயல்பட வேண்டும் என்று காவலர் ஆறுமுகப் பாண்டியும், அரசுப் பேருந்து நடத்துநரும் பேசிக் கொண்டனர். இதன் மூலம், இரு துறைகளுக்கும் இடையே ஏற்பட்டிருந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்தது.

அபராதம் வாபஸ்: இதைத்தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி அரசு பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் திரும்பப் பெறப்படும் என காவல்துறை அறிவித்தது. இரு துறைகளுக்கும் இடையே ஏற்பட்ட சமரசத்தை அடுத்து காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் தான், காவல்துறையின் இந்த அறிவிப்பு விமர்சனங்களைக் கிளப்பி விட்டுள்ளது. அரசு பேருந்துகள் மீது, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது, ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியாதது, சீருடை அணியாதது, அதிக சத்தம் வரும் ஹார்ன் பொருத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காகவே அபராதம் விதிக்கப்பட்டது.

தவறான முன்னுதாரணம்: ஆனால், கட்டிப்பிடி வைத்தியத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் விதிக்கப்ப்பட்ட இந்த அபராதங்களை ரத்து செய்வதாக காவல்துறை அறிவித்துள்ளது. இரு துறைகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையை தீர்ப்பதற்கு இந்த அபராதம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், இது ஒரு தவறான முன்னுதாரணம் என்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

அரசு பேருந்துகள் மீதான அபராதம் "திடீர்" வாபஸ்! முடிந்தது டிரைவர்கள் VS போலீஸ் பனிப்போர்!


அரசுப் பேருந்துகள் மீது விதி மீறலுக்காகவே அபராதம் விதிக்கப்பட்டன. ஆனால், இப்போது அபராதம் ரத்து செய்யப்பட்டிருப்பதால் அப்படியென்றால் இவையெல்லாம் குற்றங்கள் இல்லையா? இனி, நோ பார்க்கிங்கில் பஸ்ஸை நிறுத்தலாம், விதிகளை மீறலாம் என்று காவல்துறையே ஒப்புதல் தந்ததை போல அல்லவா உள்ளது எனக் கேள்விகள் எழுகின்றன.

அரசு ஊழியர்கள் செய்தால் விதிமீறல் இல்லையா?: அபராதம் விதித்ததை போக்குவரத்து கழகங்களே காதும் காதும் வைத்தது போல செலுத்தியிருக்கலாம். டிரைவர்களுக்கு போக்குவரத்து கழகங்கள் இதற்காக மெமோ அனுப்புவதை தவிர்த்திருக்கலாம். ஆனால் பொதுவாக, விதி மிறலுக்காக விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது மக்களுக்கு தவறான முன்னுதாரணத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.

அரசு ஊழியர்கள் என்றால் தவறு செய்யலாமா? பொதுமக்கள் தவறு செய்தால் விதிக்கப்படும் அபராதம் இதுபோல் ரத்து செய்யப்படுமா? பொதுமக்களுக்கு ஒரு நியாயம், அரசு துறைக்கு ஒரு நியாயமா? அரசு பேருந்து ஊழியர்களின் தவறால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பு என்ற கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளது. இது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும்.

முற்றிய போலீஸ் vs போக்குவரத்து துறை பிரச்சனை! இரு துறை செயலர்கள் அவசரமாக ஆலோசித்து சுமூக தீர்வு!


களங்கம் துடைக்கப்படுமா?: இந்த 2 நாட்களில் மட்டுமே, அதுவும் ஒருசில பகுதிகளிலேயே அரசு பேருந்துகளில் ஏராளமான விதி மீறல்கள் கண்டறியப்பட்டது என்றால், தமிழகம் முழுவதும் இப்படித்தான் விதிகளை மீறி இயங்கும் பேருந்துகளை போக்குவரத்து காவல்துறை அனுமதித்து வருகிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

ஆக, இரு துறைகளுக்கு இடையேயான பிரச்சனையால் பல விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அந்தப் பிரச்சனையை தீர்க்கப்போய், அரசு மக்களிடையே தவறான முன்னுதாரணத்தைக் காட்டியுள்ளது. மக்களிடையே அரசு மீது ஏற்பட்டுள்ள இந்த தவறான அபிப்ராயம் துடைக்கப்படுமா?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+