இந்த ஆண்டு இதுவரை 5.25 லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பு.. ரேபிஸ் நோயால் 28 பலி - தமிழக சுகாதாரத்துறை
சென்னை: தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 28 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளதாகவும் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தெருநாய்க்கடி சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. தெருநாய் கடியால் ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்களில் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 13 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

சமீப காலமாக தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல தெருக்களில் அங்கும் இங்கும் சுற்றித் திரியும் தெரு நாய்கள் கடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் வலம் வருவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அச்சம் அடைகின்றனர்.
கடந்த ஆண்டு 4.8 லட்சமாக நாய் கடியால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளளனர். கடந்த ஆண்டு 43 பேர் நாய் கடியால் உயிரிழந்த உள்ள நிலையில் இந்த ஆண்டு இதுவரை 28 பேர் உயிரிழந்து உள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், நகரப்புற மருத்துவமனைகளில் நாய்க்கடிக்கு தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ரேபிஸ் நோயால் பாதிப்படைந்தவர்கள் ஏஆர்வி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. நாய் தனது நகத்தால் கிழித்தாலோ? அல்லது நாய் மூலம் ஏதேனும் சிறிய காயங்கள் ஏற்பட்டாலும் RIG என்று சொல்லக்கூடிய Rabies Immunoglobulin என்ற 3ஆம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நான்கு டோஸ் ARV தடுப்பூசி அட்டவணைப்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
சிலர் செல்லப்பிராணிகள் அல்லது பழக்கமான நாய்கள் கடித்தால் பாதிப்பில்லை என்று கருதி, தடுப்பூசி போடுவதைத் தவிர்த்தால் அது ஆபத்தில் சென்று முடிந்து விடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கடித்தது செல்லப்பிராணியா அல்லது தெரு நாய்களா என்பதைப் பொருட்படுத்தாமல் தடுப்பூசி போட வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் எந்தப் பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறதோ நகராட்சி நிர்வாகத்துறை ஊழியர்கள் அதனை பிடித்து கருத்தடை செய்து வருகின்றனர். அவ்வப்போது தெரு நாய்களைப் பிடித்து கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
நாய்க்கடியால் மருத்துவமனைக்கு வந்தால் உரிய நேரத்தில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ரேபிஸ் நோயால் பாதிப்படைந்தவர்கள் மருத்துவமனையில் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. ரேபிஸ் நோயிலிருந்து மீள வேண்டும் என்றால் 4 டோஸ் தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications