பல்க் டீசல் விலை உயர்வு.. பேருந்து கட்டணம் உயரும் அச்சம்?.. தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு!
சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் மொத்தமாக டீசல் வாங்குபவர்களுக்கு லிட்டருக்கு ரூ 25 அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்து கழகமும் மொத்தமாக வாங்கி வரும் நிலையில் பேருந்து கட்டணம் உயருமா என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 120 டாலர்கள் வரை விலை உயர்ந்துள்ளன. இதை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை உயர்த்தியுள்ளன.
எனினும் சில்லறை விற்பனை நிலையங்கள் பெட்ரோல் டீசல் விலை கடந்த 4 மாதங்களுக்கு மேலாக உயராமல் அப்படியே உள்ளது. இந்த நிலையில் மொத்தமாக டீசலை கொள்முதல் செய்வோருக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ 25ஐ எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

சில்லறை விலையில் மாற்றமில்லை
சில்லறை விலையில் எந்தவித மாற்றமும் இல்லாத நிலையில் மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் டீசலால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மால்கள் உள்ளிட்டவை வாங்கி வந்தன. அந்த வகையில் அரசு பேருந்துகளை பயன்படுத்தும் பொதுமக்களை இந்த விலையுயர்வு பாதிக்கும் நிலை உள்ளது.

8 மாநில போக்குவரத்துக் கழகங்கள்
அதாவது தமிழகத்தில் உள்ள 8 மாநில போக்குவரத்துக் கழகங்கள் நாளொன்றுக்கு 16 லட்சம் லிட்டர் டீசலை நேரடியாக எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்கின்றன. இதன் மூலம் 19,270 பேருந்துகள் இயங்குகின்றன. இந்த நிலையில் சென்னையில் சில்லறை விற்பனை நிலையங்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ 91.59 க்கு விற்பனையானது.

ரூ 114 க்கு டீசல் விற்பனை
ஆனால் எண்ணெய் நிறுவனங்களில் மொத்தமாக வாங்கும் பயனாளிகளுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ 114 என டீசல் விற்பனையானது. இதை பார்க்கும் போது கடந்த 2018ஆம் ஆண்டு டீசல் மொத்த கொள்முதல் விலை ரூ 65.50 க்கு விற்பனையான போது அரசு பேருந்துகள் உயர்த்தப்பட்டதுதான் மக்களின் கண் முன்னே நிழலாடுகிறது.

விலையுயர்வால் கடன்
இந்த விலை உயர்வு கடனில் சிக்கித் தவிக்கும் பேருந்து நிறுவனங்களை பெரிதும் பாதித்து மேலும் கடனை அதிகரிக்கும். அதாவது இந்த விலையுயர்வால் நாளொன்றுக்கு ரூ 3.5 லட்சமும் ஆண்டுக்கு ரூ 1,277 கோடி ரூபாயும் கடன் சுமையை உண்டாக்கும். இதை தடுக்கும் வகையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள எண்ணெய் நிறுவனத்தை நேற்றைய தினம் நேரில் சந்தித்தனர்.

64 காசுகள் குறைப்பு
அப்போது சில்லறை விலையில் அதி வேக டீசலை சந்தை விலைக்கே வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து மூத்த போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாளொன்றுக்கு 16 லட்சம் லிட்டர் டீசல் கொள்முதல் செய்வதாக சில்லறை விற்பனை நிலையத்தில் கூறினோம். இதனால் லிட்டருக்கு 64 பைசாவை குறைப்பதாக ஒப்புக் கொண்டனர். இதன் மூலம் நாளொன்றுக்கு ரூ 1.5 கோடி மிச்சமாகும். அது போல் கூடுதலாக செலவான ரூ 3.5 கோடியையும் (விலையுயர்வால் கடன் தொகை) நாங்கள் மிச்சப்படுத்தியுள்ளோம் என்றார். இதன் மூலம் மக்கள் அஞ்சுவது போல் அரசு பேருந்து போக்குவரத்து கட்டணம் தற்போது உயர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications