சென்னை ED அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை? எகிறும் டென்ஷன்- துணை ராணுவம் குவிப்பு!
சென்னை: திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்தை தொடர்ந்து அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். தொடர்ந்து சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள டாக்டர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018 ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி , டாக்டர் சுரேஷ் பாபு மீதான வழக்கு அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்படுவதாக கூறியும் அதிலிருந்து அவரை காப்பாற்றுவதாக முதலில் மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டு இருக்கிறார்.

இதனால், கடந்த மாதம் 20 லட்சம் ரூபாயை முதல் கட்டமாக திண்டுக்கலில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் காரில் வைத்து டாக்டர் சுரேஷ் பாபு, அங்கித் திவாரியிடம் கொடுத்துள்ளார். மேற்கொண்டு 31 லட்சம் பணம் லஞ்சமாக அமலாக்கத்துறை அதிகாரி கேட்டுள்ளார். இது குறித்து நேற்று திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 20 லட்ச ரூபாயை டாக்டர் சுரேஷ் பாபு அமலாக்கத்துறை அதிகாரியிடம் கொடுத்தார். அதனைப் பெற்றுக் கொண்ட அவர் காரில் மதுரை நோக்கி வரும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர். இதனை தொடர்ந்து, மாலையில் அங்கித் திவாரியின் அலுவலகமான மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனர்.
ஆனால், அமலாக்கத்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரி இல்லாத நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுத்தனர். இதற்கிடையே மத்திய பாதுகாப்பு படையும் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதனால், அங்கு உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி மதுரை உதவி மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதால் அவர் பயன்படுத்திய அறையில் மட்டும் நடத்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அங்கித் திவாரி பயன்படுத்திய அறையில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் பயன்படுத்திய லேப்டாப்பிலும் உள்ள ஆவணங்கள் குறித்து சோதனை நடத்தினர். இந்த நிலையில், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி பிடிபட்ட விவகாரத்தில், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தப்போவதாக தகவல் வெளியானது.
இதனைத்தொடர்ந்து சாஸ்திரி பவன் வளாகம் அடைக்கப்பட்டு மத்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நள்ளிரவை தாண்டியும் சோதனை நடைபெற்றது. இதனால், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனும் இரவு நேரத்திலும் சற்று பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications