இடைவிடாத அக்கப்போர்... புதிய நிர்வாகிகள் நியமனம்.. தமிழக காங்கிரஸில் வெடித்தது பூசல்
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி புதிய நியமனங்களால் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு 32 துணை தலைவர்கள், 57 பொது செயலாளர்கள், 104 செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் தமிழக காங்கிரஸில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்புதிய நியமனங்கள் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சமூக வலைதளங்களில் பகிரங்கமாக அதிருப்தி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு சில காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் பதிலடியும் தந்து வருகின்றனர்.
இந்த நியமனம் தொடர்பாக லோக்சபா எம்.பி. கார்த்தி சிதம்பரம் தமது ட்விட்டர் பதிவில், இவ்வளவு பெரிய கமிட்டியால் எந்த பயனுமில்லை. 32 துணை தலைவர்கள், 57 பொது செயலாளர்கள், 104 செயலாளர்கள் என நியமிக்கப்பட்ட யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது, அதிகாரம் இல்லாததால் யாருக்கும் பொறுப்பு என்பது இருக்காது என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதில் தந்துள்ள காங். மூத்த தலைவர் கோபண்ணா, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் 12 துணை தலைவர்கள், 16 பொதுச்செயலாளர்கள், 30 செயலாளர்கள், 25 இணை செயலாளர்கள் என நியமனம் செய்யப்பட்டிருக்கிறபோது, தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் எண்ணிக்கை குறித்து பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? ஊருக்கு உபதேசம், தமக்கில்லையோ? என பகிரங்கமாக மோதியுள்ளார்.