சசி தரூரை புறக்கணித்த தமிழக காங்... நாளை சென்னை வரும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தடபுடல் வரவேற்பு!
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கே நாளை சென்னை வருவதை முன்னிட்டு சிறப்பான வரவேற்பளிக்க தமிழக காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்துள்ளது. அதேநேரத்தில் சசி தரூரை புறக்கணித்துவிட்டு மல்லிகார்ஜூன கார்கேவுக்கு முக்கியத்துவம் வருவதால் சர்ச்சையும் எழுந்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் போட்டியிடுகின்றனர். சோனியா குடும்பத்தின் முழு ஆதரவு மல்லிகார்ஜூன கார்கேவுக்குதான் இருக்கிறது என கூறப்படுகிறது. காங்கிரஸின் அதிருப்தி கோஷ்டியினரும் மல்லிகார்ஜூன கார்கேவை ஆதரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சசி தரூர், மல்லிகார்ஜூன கார்கே இருவரும் மாநிலங்களுக்கு சென்று காங்கிரஸ் கட்சியினரிடையே வாக்கு சேகரித்து வருகின்றனர். கடந்த வாரம் சசி தரூர் தமிழகம் வருகை தந்திருந்தார். இதனைத் தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கே நாளை சென்னை வருகிறார்.

பிரம்மாண்ட ஏற்பாடுகள்
சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தரும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சிறப்பான வரவேற்பளிக்க தமிழக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று பார்வையிட்டார். இதனை சமூக வலைதளப் பக்கங்களிலும் கே.எஸ்.அழகிரி பகிர்ந்துள்ளார்.

சென்னையில் சசி தரூர்
அதேநேரத்தில் இந்த விவகாரம் சர்ச்சையாகவும் வெடித்துள்ளது. ஏனெனில் கடந்த வாரம் சசி தரூர், ஆதரவு கேட்டு சென்னை வந்த போது காங்கிரஸ் நிர்வாகிகளில் பெரும்பாலானோர் கண்டுகொள்ளவே இல்லை. சென்னை விமான நிலையத்தில் சசி தரூரை பொதுச்செயலாளர் அருள் பெத்தையா மட்டுமே வரவேற்றார். பின்னர் கிண்டி ராஜீவ் காந்தி சிலை, காமராஜர் சிலை ஆகியவற்றுக்கும் சசி தரூர் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனுக்கும் வருகை தந்தார்.

சசி தரூர் புறக்கணிப்பு
சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த சசி தரூரை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர் கூட வரவேற்கவே இல்லை. சத்தியமூர்த்தி பவனுக்கு சசி தரூர் வருவதை தெரிந்து கொண்டே அவர்கள் அங்கு இல்லை எனவும் கூறப்பட்டது. ஒருசில மகளிரணியினர் மற்றும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் மட்டுமே சத்தியமூர்த்தி பவனில் இருந்தனர். இதனால் சசி தரூர் கடும் ஏமாற்றம் அடைந்து திரும்பினார்.

அழகிரியால் சர்ச்சை
ஆனால் இம்முறை முன்கூட்டியே பிரம்மாண்ட ஏற்பாடுகளை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியே முன்னின்று செய்கிறார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஒருவரை பிரசாரம் செய்யவேண்டும் எனில் கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறது மேலிடம். ஆனால் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கொண்டு மல்லிகார்ஜூன கார்கேவை பகிரங்கமாக ஆதரித்து கே.எஸ்.அழகிரி செயல்படுவது எப்படி நியாயம் என்கிறது எதிர்தரப்பு.












Click it and Unblock the Notifications