பொறியியல் படிப்புகளின் மீது ஆர்வம்.. 8 ஆண்டுகளுக்கு பின் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்..நாளை கடைசி
சென்னை: பொறியியல் கலந்தாய்விற்காக கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2,00,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நாளையுடன் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் முடிவடைய உள்ள நிலையில் இன்னும் 50,000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதாகவும், விண்ணப்பித்துள்ள மாணவர்கள் விரைந்து கலந்தாய்விற்கான கட்டணத்தை செலுத்தி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20ம் தேதி தொடங்கியது.

விண்ணப்பம் அறிவிக்கப்பட்ட நாளில் விண்ணப்பப்பதிவுக்கான கடைசி நாளாக கடந்த 19ம் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகாததை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த கடைசி தேதி மாற்றப்பட்டு, சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியானதில் இருந்து 5 நாட்கள் அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. நேற்று மாலை வரைக்கும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு 1,90,000 பேர் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பெருமளவில் குறைந்தன. 2018-2019 கல்வியாண்டில் காலியாக இருந்த 1,78,000 இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் வெறும் 71,900 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். நடப்பாண்டில் இந்தநிலை முற்றிலும் மாறி இதுவரை 2,00,000கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, ஐ.டி துறையில் சேர மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றன.
தொழில் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டன. முன்னணி கல்வி நிறுவனங்களில் படிப்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு கனவாக இருந்த நிலையில், அரசின் இட ஒதுக்கீட்டினால் அந்த கனவு நனவாகி இருக்கின்றன. இது கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் எதிரொலித்து இருக்கின்றன.
இதனிடையே, பொறியியல் மீதான ஆர்வம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாளையுடன் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் முடிவடைய உள்ள நிலையில் இன்னும் 50,000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதாகவும், விண்ணப்பித்துள்ள மாணவர்கள் விரைந்து கலந்தாய்விற்கான கட்டணத்தை செலுத்தி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவுறுத்தியுள்ளது.
ஜூலை 27ஆம் தேதியன்று மாணவர்கள் விண்ணப்பம் செய்வது நிறைவந்த பின்னர் ரேண்டம் எண் வெளியிடப்படும். அதன்பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். ஆகஸ்ட் மாதத்தில் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு பின்னர் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications