முழு ஊரடங்கு காரணமாக தேர்வு ஒத்திவைப்பு - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
சென்னை: கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அன்று நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலைப் பணிகளுக்கான தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப் பட்டுள்ள நிலையில் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

நாளை கட்டிடக்கலை திட்ட உதவியாளர் பணிக்கான தேர்வும், ஜனவரி 9ஆம் தேதி ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிக்கான தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஜனவரி 9ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி 11-ஆம் தேதி அதாவது செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட்டுகளை வைத்து தேர்வாளர்கள் இந்த தேர்வுகளை எழுதலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.
அதேநேரத்தில் நாளை நடைபெற உள்ள கட்டிடக்கலை திட்ட உதவியாளர் பணிக்கான தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications