டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரிசல்ட் எப்போது.. தோராய கட் ஆஃப் மதிப்பெண்கள் யாருக்கு எவ்வளவு தெரியுமா?
சென்னை:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலை பதவிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்து தேர்வர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. கட் ஆஃப் மதிப்பெண் குறைந்த பட்சம் எத்தனை மதிப்பெண்கள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 4 பதவிகளுக்கான அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி வெளியிட்டது. 7,301 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 22 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில், 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். சுமார் 3.5 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. முன்னதாக, தேர்வாணையம் வெளியிட்ட உத்தேச கால அட்டவணையில், தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
என்னதான் ஆச்சு டெல்லிக்கு.. கணவரை கொன்று 10 துண்டுகளாக்கிய மனைவி.. மகன் உடந்தை.. 2 ஷாக் காரணங்கள்

டிஎன்பிஎஸ்சி ரிசல்ட் எப்போது
அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதனால், ஏற்பட்ட கால தாமதம் காரணமாக குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட இருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.இடஒதுக்கீடு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு தேர்வு செயல்முறைகளில் மாற்றங்களை செய்ய உத்தரவிட்டுள்ளதால், தேர்வாணையம் அதற்கு ஏற்றாற்போல் மாற்றங்களைச் செய்து வருகிறது. எனவே கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிச்சயம் பொதுப்போட்டியில் கட் ஆஃப் குறைவாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

தமிழ் மொழி தகுதி
டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளை கொண்டது. பகுதி 'அ '-வில் உள்ள கட்டாயத் தமிழ் பகுதியில் 100 வினாக்களும், பகுதி 'ஆ' வில் பொது அறிவு பாடத்தில் 75 வினாக்களும், கணித அறிவில் பாடத்தில் 25 வினாக்களும் இடம்பெற்றன. முந்தைய, குரூப் 4 தேர்வுகளில், கட்டாய மொழிப் பாடங்களில் தமிழ் அல்லது ஆங்கிலம் என்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தேர்வர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இம்முறை தமிழ் மொழி மட்டுமே தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக அறிவிக்கப்பட்டது. எனவே, முந்தையை காலங்களில் ஆங்கில பாடங்களில் குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வந்த தேர்வர்களுக்கு இம்முறை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சற்று கடினமாகவே இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது, தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு சாதகமானதாக இருக்க வாய்ப்பு உள்ளது.

தமிழில் எழுதிய தேர்வர்கள்
இந்த ஆண்டு குரூப் 4 எழுதியவர்களில் தமிழ் பாடத்தைப் பொறுத்த வரையில் 90 முதல் 95 வரை மதிப்பெண்கள் பெறும் தேர்வர்கள் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலில் நல்ல இடத்தை பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தபடியாக, இந்தாண்டு குரூப் 4 பொது அறிவு வினாக்களுமே விளிம்பு நிலை தேர்வர்களுக்கான சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது இந்தத் தேர்வுக்கு மட்டும் தயாராகி வருபவர்களால் எளிதாக மதிப்பெண்கள் எடுக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தோராய கட் ஆஃப் மதிப்பெண்கள்
பொது அறிவு வினாக்கள் குரூப் 4 தேர்வுக்கு மட்டுமே தயாரான தேர்வர்களுக்கு சாதகமாக இருந்ததாக கூறப்பகிறது.
எனவே, பொது பிரிவினர் 173 , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 168 மிகவும் பிற்படுத்தப்பட வகுப்பினர் 165, பட்டியலின வகுப்பினர் 155, பழங்குடியினர் 150 கேள்விகளுக்கு மேல் சரியான பதில் அளித்திருந்தால் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இது தோராயமான கட் ஆஃப் மதிப்பெண்கள்தான். ஒட்டுமொத்தமாக இந்த கட் ஆஃப் மதிப்பெண்களில் 3-4 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 1-2 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.