காவலர் பணிக்கான எழுத்து தேர்வில்.. கேட்கப்பட்ட “லெட்டர்’ கேள்வி! விடையை கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்
சென்னை: தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதிலும் இன்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 2.24 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். பத்தாம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட இந்த பணிக்கான எழுத்து தேர்வு எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர். தேர்வர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் சில புதிர் கேள்விகளும் இடம் பெற்று இருந்தன.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் வாயிலாக நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது.

மொத்தம் 2833 ஆண், பெண் 2-ம் நிலை காவலர்கள் பணியிடங்களும், சிறைத்துறையில் 180 சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களும், தீயணைப்புத்துறையில் 631 தீயணைப்பாளர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. மொத்தம் 3644 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
சுமார் 2.24 லட்சம் பேர் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் 45 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 1.30 மணி வரை நடைபெற்றது. நேற்று காலை 8 மணி முதலே ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையங்களில் குவிய தொடங்கினார்கள். பத்தாம் வகுப்பு கல்வி தகுதி என்பதால், இந்த தேர்வை எழுத பலரும் ஆர்வமாக வந்திருந்தனர்.
பெண்கள் பலரும் தங்கள் குழந்தைகளை கணவரிடம் கொடுத்துவிட்டு தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத சென்றதை பார்க்க முடிந்தது. 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி என்றாலும், முதுகலை பட்டம் பெற்றவர்கள் கூட தேர்வு எழுதினர். இந்த தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர். பொது அறிவு மற்றும் தமிழில் உள்ள கேள்விகள் மிக மிக எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.
எடுத்துக்கட்டாக, இந்திய தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் எங்கு உள்ளது? தமிழகத்தின் மாநில பறவை எது? ஆசியாவின் டெட்ராய்டு எது? பாலைவனமே இல்லாத கண்டம் எது? போன்ற கேள்விகள் இடம் பெற்று இருந்தன. அதேபோல, கணிதத்தில் தேர்வர்கள் சற்று சிந்தித்து விடையளிக்க கூடிய வகையிலான கேள்விகள் இடம் பெற்று இருந்தன.
காவலர் தேர்வில் கேட்கப்படட் லெட்டர் கேள்வி ஒன்று வலைத்தளங்களில் பரவி வருகிறது. தேர்வர்களை கொஞ்சம் அதிகம் சிந்திக்க வைத்த இந்த கேள்வி வருமாறு:-
கேள்வி: ஆங்கில எழுத்துக்களின் வரிசையில் "K மற்றும் V' இடையிலான எழுத்துக்களில் சரியாக நடுவில் அமைந்துள்ள எழுத்து என்ன ?
ஆப்ஷன்: A)- N, B)- O, C)- Q D)- எந்த எழுத்தும் இல்லை.
மற்றொரு கேள்வி: சிறுவர்கள் வரிசையில் கோபி இடமிருந்து 7வது இடத்திலும், வெங்கட் வலமிருந்து 12வது இடத்திலும் உள்ளனர். அவர்கள் தங்கள் இடங்களை மாற்றிக் கொண்டால், கோபி இடமிருந்து 22வது இடத்துக்கு வருவார். வரிசையில் மொத்தம் எத்தனை சிறுவர்கள் உள்ளனர் ?
(A) 19 (B) 34 (C) 31 (D) 33
இதில் மேலே உள்ள லெட்டர் கேள்விக்கான விடை எதுவும் இல்லை என்று கல்வியாளர்களும் தேர்வர்களும் பதிவிட்டு வருகிறார்கள். அதே சமயம் P மற்றும் Q ஆகிய இரு எழுத்தக்கள் தான் நடுவில் வருகின்றன. இதில் Q என்ற எழுத்து மட்டும் ஆப்ஷனில் தரப்பட்டுள்ளது. எனவே Q தான் விடை எனவும் கூறப்படுகிறது.
அதேபோல, சிறுவர்கள் கேள்விக்கான விடை 33 என்றும் கூறியிருக்கிறார்கள். எனினும், சீருடை பணியாளர் தேர்வானையம் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு வந்த பிறகே விடையை 100 சதவீதம் உறுதி செய்ய முடியும்.












Click it and Unblock the Notifications