அதிமுகவுக்கு இன்னைக்குதான் தீபாவளி! எங்களை பிடித்த சனி ஒழிந்தது! ஓபிஎஸ்ஸை விமர்சித்த சி.வி.சண்முகம்
சென்னை: அதிமுகவிற்கு இன்றைக்குத்தான் தீபாவளி, எங்களை பிடித்த சனி ஒழிந்தது என முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், ஓபிஎஸ்ஸின் திமுக இணைப்பை கடுமையாக விமர்சித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதற்கு காலம் தாழ்த்தினார், முடக்கினார், அதிமுக வேகமாக செயல்படாமல் பார்த்துக் கொண்டார். இதையெல்லாம் திமுக செய்ய வேண்டியது.

ஆனால் அதிமுகவில் இருந்து கொண்டே ஓபிஎஸ் செய்தார். நகர்மன்றத் தலைவர், எம்எல்ஏ, அமைச்சர், முதலமைச்சர், அதிமுக ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை ஓபிஎஸ்ஸுக்கு எந்த இயக்கம் தந்ததோ, அந்த இயக்கத்தின் தலைமைக் கழகத்தின் கதவுகளை எட்டி உதைத்த பாவத்தால் கட்சியில் இருந்து பொதுக் குழுவினரால் நீக்கப்பட்டார்.
இதற்கு மேல் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் நீடிக்கவிட்டால் , கட்சியை அழித்துவிடுவார் என பொதுக் குழு உறுப்பினர்களே முடிவெடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட துரோகிகளை கட்சியிலிருந்து நீக்கினர்.
கட்சியில் இருந்து வெளியேற்றிய பிறகும் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றினார். மிகவும் நியாயமானவர் போல் பேசினார். தனக்கு எந்த பதவியும் வேண்டாம், தன்னை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார்.
ஆனால் இவர் ஆமை, இவரை வீட்டிற்குள் விட்டால் வீடு விலங்காது, நாசமாகத்தான் போகும். அதிமுகவை ஒருங்கிணைக்க போகிறேன் என சொன்னாரே இதுவரை அதற்கான முயற்சிகளை எடுத்தாரா? சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையாவது சந்தித்து ஏதாவது பேசியிருக்கிறாரா?
ஆனால் அவர் திமுகவின் பி டீம் என அன்று நாங்கள் சொன்னது இன்று உண்மையாகிவிட்டது. அதிமுகவை பிளவுப்படுத்தி, இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க திமுக உத்தரவிட்டதன் பேரில் ஓபிஎஸ் வழக்கு மேல் வழக்கு போட்டார்.
ஓபிஎஸ்ஸின் பின்னால் திமுக இருப்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இந்த துரோகம் தோலுரித்து காட்டப்பட்டுள்ளது. துரோகம் என்றைக்கும் ஜெயிச்சதாக சரித்திரம் இல்லை.
அதிமுகவில் உள்ள எல்லாருக்கும் இன்றுதான் பொங்கல், தீபாவளி! ஏனென்றால் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். எங்களை கொஞ்சம் நஞ்சம் பிடித்திருந்த சனி விட்டது. இனி எங்கள் கட்சிக்கு திருஷ்டி சுத்தி போட வேண்டியதுதான் பாக்கி. இவ்வாறு சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.
திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது குறித்து சசிகலா கூறியிருப்பதாவது: தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது.
தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது.
ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி.
நாளை நமதே!
வெற்றி நிச்சயம்!
பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க!
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க!
புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க!
நன்றி,
வணக்கம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications