அன்பழகனுக்கு இன்று 98-வது பிறந்தநாள்... வாழ்த்துவதில் வற்றாத இன்பம் கொள்கிறேன்- ஸ்டாலின்
சென்னை: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கு இன்று 98-வது பிறந்தநாள் என்பதால் மு.க.ஸ்டாலின், வைகோ, வீரமணி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கட்சிக்கு அன்பழகன் பொதுச்செயலாளர் மட்டுமல்ல; தனது பெரியப்பாவும் கூட என மு.க.ஸ்டாலின் உருக்கமாக தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.
உடல்நலம் குன்றி இருப்பதால் அன்பழகனை நேரில் சந்தித்து வாழ்த்துக்கூற வரவேண்டாம் என நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு திமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளுக்கு இணையாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சென்ற சந்திரயான் 2.. சபாஷ் இஸ்ரோ!
முதுபெரும் தலைவர்
திமுக பொதுச்செயலாளர் பேராசியர் அன்பழகன் 98-வது வயதில் அடியெடுத்து வைத்திருப்பதன் மூலம் இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர் என்ற சிறப்பை பெறுகிறார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு உற்ற தோழனாகவும், சகோதரனாகவும் திகழ்ந்தவர் அன்பழகன். அண்ணா காலம் தொடங்கி கருணாநிதியின் இறுதி மூச்சு வரை அவருடன் பயணித்தவர் இவர்.
இயற்பெயர்
கருணாநிதி பிறந்த அதே திருவாரூர் மாவட்டத்தில் தான் அன்பழகனும் பிறந்தார். ராமையா என்ற இயற்பெயரைக் கொண்ட அன்பழகன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் படித்த போது தனித்தமிழ் மீது இருந்த காதலால் தனது பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார்.
பெயர் சூட்டல்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த அன்பழகன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசியராக பணியாற்றினார். அப்போது அவரை சந்திக்கும் போது ''பேராசிரியர் தம்பி வாப்பா'' என அண்ணா உரிமையோடு அழைக்க அதுவே அவருக்கு பட்டமானது. பின்னர் கட்சியினரால் பேராசிரியர் அன்பழகன் என அழைக்கப்பட்டார்.
வீட்டில் ஓய்வு
ஒரு நூற்றாண்டையே நெருங்கிவிட்ட அன்பழகன் வயது மூப்பு காரணமாக நோய்களுக்கு ஆட்பட்டு தற்போது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். அவரை அவ்வப்போது திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் வீடு தேடிச்சென்று சந்தித்து நலம் விசாரிப்பதோடு, கட்சியின் முக்கிய விவகாரங்கள் பற்றியும் எடுத்து கூறி வருகின்றனர்.
முதுபெரும் தந்தை
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் திராவிட இயக்கத்தின் முதுபெரும் தந்தை பேராசிரியர் அன்பழகன் என்றும், அவரை பெரியப்பாவாக தாம் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவரை வணங்குவதிலும், வாழ்த்துவதிலும் வற்றாத இன்பமும், வாடாத மகிழ்ச்சியும் அடைவதாக கூறியுள்ளார்.