நாடு முழுவதும் களைகட்டிய ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்கள்.. இரண்டாவது நாளாக இன்றும் கொண்டாடப்படுகிறது
சென்னை: நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் விழா சிறப்பாக நேற்று தொடங்கியது. சகோதரத்துவத்தை கொண்டாடும் விழாவாக இது கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இந்த சமூகம் என்பது சகோதரத்துவத்தையும் அன்பையும் உள்ளடக்கியது என்பதை வலியுறுத்தும் விதமாக ரக்ஷா பந்தன் விஷா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாம் யார் கைகளில் கயிற்றை கட்டுகிறோமோ அவர்களை காலம் முழுவதும் சகோதர/சகோதரிகளாக பாவித்து அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுப்பதை உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் இந்த விழாவாக கொண்டாடப்படும் என்று சொன்னாலும் கூட வட மாநிலங்களில் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில்தான் இது அதிகமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இந்த பண்டிகையை சிறப்பிக்கும் விதத்தில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 குறைக்கப்படுகிறது என்கிற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளையும் கூறியுள்ளனர். "ரக்ஷா பந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாளாகும். கேஸ் சிலிண்டரின் விலை குறைப்பு எனது குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும். என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், இதுவே என் விருப்பம்" என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் காரணமாக வட மாநிலங்களில் ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று (ஆக.30) வங்கிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியான இன்று வங்கிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது. இதற்காக 'Thanks Jawan' என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியான சம்பா செக்டரில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு சிறுமிகள் இனிப்பு ஊட்டி ராக்கி கயிறை கட்டியுள்ளனர். அதேபோல குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் சகோதர- சகோதரிகளை இணைக்கும் அன்பின் அழகான பிணைப்பை உள்ளடக்கியது. மேலும் பரஸ்பர நம்பிக்கையுடன் தவிர்க்கமுடியாத உறுதிப்பாட்டுடன் அவர்களை ஒன்றிணைக்கிறது. இந்த நாளில், இந்தியாவை மேலும் பெருமைப்படுத்தும் வகையில் முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்ள நமது 'மகளிர் சக்திக்கு' ஆதரவாக நிற்போம் என்று உறுதியேற்போம். இந்த பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் அதிகரிக்கட்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications