எடப்பாடியை என்ன செய்யலாம்.. பிளான் போடும் ஓபிஎஸ்! இன்று சென்னை ஹோட்டலில் நிர்வாகிகள் கூட்டம்
சென்னை: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பு அடுத்தக்கட்ட நகர்வை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அவர் சென்னையில் கூட்டுகிறார்.
அதிமுக ஒற்றைத் தலைமை போட்டியில் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்று அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அதிரடி நகர்வுகளை அவர் மேற்கொண்டு வருகிறார். மறுபக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்பு அதிமுகவை கைப்பற்ற சட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அறிஞர் அண்ணா, ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக கூறி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.

இதுகுறித்து சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது வெளியிட்ட அறிக்கையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் சுழகப் பொதுச் செயலாளர், மான்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 - திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஓ பன்னீர்செல்வம், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டுகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "11-10-2023 - புதன்கிழமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சென்னை, எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் 11-10-2023 புதன்கிழமை மாலை 05.00 மணிக்கு நடைபெறும்.
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications