சுட்டெரிக்கும் சூரியன்..பூமி குளிர பெய்யும் கோடை மழை..4 மாவட்ட மக்களே என்ஜாய் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாட்டில் பல ஊர்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அவ்வப்போது வருண பகவானின் கருணையால் ஜில்லென்று மழை பெய்து வானிலையை மாற்றி வருகிறது. மக்களின் மனம் குளிர பெய்யும் மழையால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பி வருகின்றனர். அடுத்த சில மணி நேரங்களில் தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குளிர்ச்சியான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் தமிழ்நாட்டில் சில வாரங்களில் ஆரம்பித்து விடும் அதற்கு முன்னதாகவே ஆங்காங்கே வெப்பக்காற்று வீசி வருகிறது. மழையும் பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று பிற்பகலில் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வந்தது. இரவிலும் வெப்பம் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அதே சமயம் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று காலை வழக்கம் போல வெயில் அடித்தது. ஆனால் 11 மணிக்கு மேல் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டது. வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து மழைக்கான அறிகுறி தென்பட்டது. அதைத் தொடர்ந்து பகல் 12 மணி அளவில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் முழுவதும் சாரல் மழை பெய்தது. பொதுவாக மழை பெய்தால் சாலை ஓரம் ஒதுங்கி நின்று கொள்ளும் மக்கள், வெப்பம் காரணமாக நேற்று சாரல் மழையில் நனைந்தபடியே நடந்து சென்றதை பார்க்க முடிந்தது. மழை காரணமாக சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
மேற்கு மாவட்ட பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது. மழை காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திற்பரப்பு அருவியில் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது. நேற்று காலையில் அங்கு சாரல் மழை பெய்ததால் குளு, குளு சீசன் நிலவியது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்றைய தினம் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 முதல் 13ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications