சதமடித்த தக்காளி விலை...இல்லத்தரசிகள் கவலை - பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் விற்க ஏற்பாடு
காய்கறி கடைகளில் தக்காளி விலை 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாவதால் பண்ணை பசுமைக்கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை: சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் தக்காளி விலை தாறு மாறாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளதால் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் கடந்த மாதம் ஒரு கிலோ 5, ரூபாய்க்கு கூவி கூவி விற்கப்பட்ட தக்காளி மளமளவென விலை உயர்ந்தது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்
சென்னையின் தக்காளி தேவையை பூர்த்தி செய்ய தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ராயகோட்டை, கர்நாடகா , மற்றும் ஆந்திராவிலிருந்து உள்ளிட்ட வடமாநிலங்களிலிருந்து தக்காளி வரும் வழக்கமாக சென்னையின் தக்காளி தேவையை பூர்த்திசெய்ய நாளொன்றுக்கு 1000டன் அளவு வரத்து வந்து கொண்டிருந்த நிலையில். கோடைக்கால விளைச்சல் குறைந்த நிலையில் தக்காளி வரத்து குறைந்து 500 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
சென்னையில் தக்காளி விலை
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் ரூ.80க்கும், சில்லறை விற்பனையில் ரூ.100க்கும் விற்பனையாகி வருகிறது. வரும் நாட்களில் தக்காளி விலை குறையுமா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரையில் தக்காளி விலை
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் முதல் தர தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரையும், இதற்கு அடுத்த ரகம் கிலோவுக்கு ரூ.85 வரையும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் பெய்த மழை காரணமாக தக்காளிகள் செடியிலேயே அழுகி விடுகின்றன. இதனால், விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைவு உள்ளது.
தக்காளி வரத்து குறைவு
ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தக்காளிக்கும் தட்டுப்பாடு உள்ளது. 15 கிலோ எடை கொண்ட ஆந்திரா தக்காளி ஒரு பெட்டி ரூ.900 வரை விற்பனையாகிறது. சிறு, சிறு கடைகளில், சிறிய மார்க்கெட்டுகளில் தக்காளியின் சில்லரை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பண்ணை பசுமை கடைகளில் விற்பனை
இந்நிலையில், பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அமைச்சர், மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்து, விலை அதிகரித்து கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ தக்காளி ரூ. 75
சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.75 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படும். நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 65 பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி கிடைக்கும். தேவையின் அடிப்படையில் நியாய விலை கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.