எகிறி அடித்த கனமழை.. சென்னையில் சட்டென உயர்ந்த தக்காளி விலை! கிலோ இவ்வளவா?
சென்னை: கனமழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்திருக்கிறது. எனவே தக்காளி விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. மார்க்கெட் விலையே கடுமையாக இருக்கும் நிலையில், சில்லறை விற்பனை கடைகளில் விலை இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வழக்கமாக வடகிழக்கு பருவமழை, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு நல்ல மழையை கொடுக்கும். ஆனால் இதுதான் தலைவலியே! சென்னையின் நெருக்கமான கட்டமைப்பு காரணமாக மழை நீரை வெளியேற்றுவதில் கடும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை சென்னை மக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை சென்னை மக்களை அச்சுறுத்தியுள்ளது.

நேற்று காலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 15ம் தேதி வாக்கில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. இது இன்றும் நாளையும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும்.
எனவே இன்றும் நாளையும் சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. முன்னெச்சரிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்திருந்தனர். குறிப்பாக வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் மக்கள் தங்கள் கார்களை பாதுகாப்பாக மேம்பாலத்தின் மீது நிறுத்தியிருந்தனர். ஆனாலும், இந்த கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் போட்டிருந்தனர்.
மறுபுறம் அத்தியாவசிய காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை விண்ணை தொட்டிருக்கிறது. தற்போது கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலையேற்றத்திற்கு, வரத்து குறைவே காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது தினமும் கோயம்பேடு சந்தைக்கு 1300 டன் அளவுக்கு தக்காளி வரும். ஆனால் இன்று வெறும் 800 டன் அளவுக்குதான் வந்திருக்கிறது.
எனவே டிமாண்ட் அதிகரித்து, விலையும் எகிறியுள்ளது. மொத்த சந்தையிலேயே இவ்வளவு விலை எனில், சில்லறை விற்பனை கடைகளில் இதன் விலை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications