கன்னியாகுமரி சுற்றுலா போறீங்களா.. திருவள்ளுவர் சிலைக்கு போக முடியாது! எத்தனை மாதம் தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றான திருவள்ளுவர் சிலையை மக்கள் பார்வையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முக்கிய சுற்று மையங்களில் ஒன்று கன்னியாகுமரி. இங்குள்ள திருவள்ளுவர் சிலையைப் பார்க்க ஆண்டுதோறும் லட்சக் கணக்கான மக்கள் அங்குத் திரள்வது வழக்கம்.
குமரியில் திருவள்ளுவருக்கு வானை முட்டும் அளவுக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 133 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலை
இந்த சிலையைக் கடந்த 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருங்கற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, 7 ஆயிரம் டன் எடை கொண்டதாகும். 2004இல் ஏற்பட்ட சுனாமி சமயத்தில்கூட, அசராமல் இருந்த இந்த சிலை நிறுவப்பட்டு சுமார் 22 ஆண்டுகள் ஆகிறது.

சுற்றுலாப் பயணிகள்
தினசரி இந்த சிலையைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று வருகின்றனர். அதேபோல அங்குள்ள மற்றொரு முக்கிய இடம் விவேகானந்தர் பாறை. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை தளத்துடன் பாலம் அமைத்து சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து இருந்தார்.

5 மாதங்கள் தடை
இதற்கிடையே பராமரிப்பு பணிகள் காரணமாகத் திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட 5 மாதங்கள் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசப்படுவதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உப்பு காற்றினால் திருவள்ளுவர் சிலை சேதமடைவதைத் தவிர்க்க இதுபோல ரசாயனக் கலவை பூசும் பணிகள் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுவது வழக்கம். கடைசியாக 2017ஆம் ஆண்டு இதுபோன்ற ரசாயனக் கலவை பூசப்பட்டது.

எப்போது வரை
இப்போது மீண்டும் இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் ரசாயனக் கலவை பூசும் பணியினை தகவல் தொழில்நுட்பத்து அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இதன் காரணமாக இன்று முதல் வரும் நவம்பர் 2 வரை அடுத்து 5 மாதங்களுக்குத் திருவள்ளுவர் சிலையைப் பார்வையிடச் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன பணி
முதலில் சிலையில் உள்ள வெடிப்புகளில் சுண்ணாம்புக் கலவை பூசப்படும் பின்னர் சிலையில் படிந்துள்ள உப்புக்கரிசல்கள் காதிக் கூழ் மூலம் நீக்கப்படும். அதைத் தொடர்ந்து இறுதியில் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிலிக்கான ரசாயனக் கலவை பூசப்படும்.












Click it and Unblock the Notifications