சொந்த வாகனத்தில் பயணிகளை ஏற்றினால் ரூ. 25000 அபராதம்.. போக்குவரத்து துறை எச்சரிக்கை
சென்னை: சொந்த பயன்பாட்டிற்கான கார் உள்ளிட்ட வாகனங்களில் பணத்திற்காக பயணிகளை ஏற்றினால் ரூ.25,000 அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக வாடகைக்கு விடுவதை தடுக்க போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி உள்ளது.
சொந்த பயன்பாட்டு வாகனங்களில் பயணிகளை ஏற்றக்கூடாது என்பது போக்குவரத்து விதி. விதிகளை மீறி வெள்ளை நிற பதிவு எண் பலகை கொண்ட வாகனங்களை வாடகைக்கு விடுவதாக புகார் எழுந்த நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வாகனங்களை பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல பொதுமக்கள் வசதிக்காக வணிக உரிமம் இல்லாத வாடகை கார் பயன்பாடு அதிகரித்து வருவதன் எதிரொலியாக, போக்குவரத்து துறை முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. சொந்தப் பயன்பாடு வாகனங்களை விதிகளை மீறி இயக்கும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரயில், பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும். தனியார் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணமும் அதிகம். இதை பயன்படுத்தி சொந்த பயன்பாட்டு கார்களை பலரும் வாடகைக்கு பயன்படுத்துவதும் நடக்கும். இந்தச் சூழலில் தான் இந்த முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications